கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் முக்கோடா கிராமத்தில் நிகழ்ந்த ஒரு பயங்கர சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீரப்பாய் (21) என்பவரும் சாக்ஷிதா (19) என்பவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர் இருவரின் உறவைத் தொடக்கத்தில் கடுமையாக எதிர்த்தனர்.
ஆனால், காதலர் ஜோடி பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி வீட்டைவிட்டு வெளியேறினர். பின்னர் போலீசார் இருவரையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சமாதான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பெற்றோர் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
சாக்ஷிதாவுக்கு சமைப்பதிலே அனுபவம் குறைவாக இருந்தது. குறிப்பாக, சாம்பாரின் ருசி பிடிக்கவில்லை என்ற காரணத்துக்காக, பீரப்பாய் மனைவியுடன் அடிக்கடி வாய்த்தகராறு செய்து வந்தார். சமீபத்தில் சாக்ஷிதா சமைத்த சாம்பாரை சாப்பிட்ட பீரப்பாய், மீண்டும் அதே குற்றச்சாட்டை முன்வைத்து மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் கடுமையான நிலையில், ஆத்திரம் அடைந்த பீரப்பாய் தனது மனைவியை தரையில் தள்ளிவிட்டு கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சாக்ஷிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், பீரப்பாயை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.