தூத்துக்குடியில் இருந்து இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவுக்கு காய்கறிகள், கட்டுமான பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தோணி மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இலங்கையில் இருந்து பழைய இரும்பு பொருட்கள், பழைய காகிதங்கள் கொண்டு வரப்படுகின்றன.
பொதுவாக தோணி போக்குவரத்து கடல் சீதோஷ்னநிலையை கருத்தில் கொண்டு இயக்கப்படுகிறது. மே மாதம் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 30-ஆம் தேதி வரை கடலில் கடினமான கால நிலை காணப்படுவதால் தோணி இயக்கப்படுவது இல்லை. செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை சுமூகமான காலநிலை நிலவுவதால் தோணி போக்குவரத்து நடைபெறும்.
இந்நிலையில் தூத்துக்குடி தோணி உரிமையாளர் சங்கத்தினர் கப்பல் போக்குவரத்து துறை இயக்குனரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் தோணிகளில் தற்போது அதிநவீன பாதுகாப்பு சாதனங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதே போன்று காலநிலையால் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெறவில்லை.
ஆகையால் தூத்துக்குடி-கொழும்பு, தூத்துக்குடி-மாலி இடையே ஆண்டு முழுவதும்(தினமும்) தோணி போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர். இதனை பரிசீலித்த மத்திய கப்பல் போக்குவரத்து இயக்குனரகம் உரிய நிபந்தனைகளுடன் அனைத்து பருவ காலங்களிலும் தோணி போக்குவரத்துக்கு அனுமதி அளித்து உள்ளது.
அதன்படி தூத்துக்குடி-கொழும்பு இடையேயான தோணி போக்குவரத்து ஆண்டு முழுவதும் அனைத்து பருவகாலங்களிலும் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது. அதே போன்று தூத்துக்குடி-மாலி இடையேயான தோணி போக்குவரத்து ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டு வந்தது. இதனை மே மாதம் 15-ஆம் தேதி வரை தோணியை இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் தோணி தொழில் புத்துயிர் பெறும் என்று தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.