கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இளவயதில் திடீர் மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் போஜ்பூர் நகரில் வசித்து வருபவர் ரெஹான் குரோஷி 25 வயதான இளைஞர். இவர் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென விழுந்து உயிரிழந்தார். கடந்த 2 மாதங்களில் இப்பகுதியில் நடந்த மூன்றாவது இளம் வயது திடீர் மரணமாக இது பதிவாகியுள்ளது. இவர் போஜ்பூர் பகுதியின் மொஹல்லா படி மண்டி பகுதியை சேர்ந்தவர். இரவு உணவுக்குப் பிறகு அவர் தனது SIM கார்டு கடைக்கு நடந்து சென்றபோது, சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு நாய் மீது திடீரென விழுந்துவிட்டார்.
அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துசென்றனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே , அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பிறகு குடும்பத்தினர் மொராதாபாத் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும், அவரது உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டது.
இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. மருத்துவ அதிகாரிகள் அவர் மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம். வெப்பஅழுத்தம் காரணமாக இருக்க வாய்ப்பு இல்லை, ஏனெனில் அவர் ஒரு குளிரூட்டப்பட்ட சுற்றுப்புறத்திலிருந்தே வெளியே வந்தார்.
ரெஹானுக்கு 7 மாதம் முன்னர் தான் திருமணம் நடைபெற்றது. அவரது மனைவி நஜ்மா, தந்தை குஃப்ரான், தாய் ருக்சானா மற்றும் 3 சகோதரர்கள் வெளியூரில் வசித்து வருகின்றனர். இளம் வயதிலேயே ஏற்படும் இந்த திடீர் மரணங்கள் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளன.