நாடு முழுவது ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி பல முக்கிய மாற்றங்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியாவது வழக்கம். அந்த வகையில் இன்று ஜூன் 1ஆம் தேதி என்பதால் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர இருக்கிறது.
அதன்படி பிஎஃப் பணம் எடுக்கும் முறை, ஆதார் கார்டு இலவசமாக புதுப்பிக்கும் கடைசி தேதி மற்றும் வருமான வரி சான்றிதழ் தாக்கல் ஆகியவை முக்கியமானவை. இதில் ஒவ்வொன்றாக விரிவாக பார்ப்போம்:
கேஸ் சிலிண்டர் விலை:
ஒவ்வொரு மாதமும் கேஸ் சிலிண்டர் விலை என்பது மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஜூன் 1-ம் தேதி என்பதால் கேஸ் சிலிண்டர் விலை உயரலாம் அல்லது குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிஎஃப் (EPFO) பணம் எடுக்கும் முறை எளிமை
ஊழியர் வருங்கால வைப்பு நிதியான பிஎஃப் (PF) கணக்கிலிருந்து பணம் எடுக்கும் முறை ஜூன் 1 முதல் மேலும் எளிமையாக்கப்படுகிறது. இனிமேல் பிஎஃப் தொகையை ATM மற்றும் UPI வழியாக நேரடியாக பெற முடியும்.
இதுவரை ஆன்லைன் கோரிக்கை செய்யும்போது, காசோலை அல்லது வங்கி கணக்குப் புத்தகத்தின் நகலை பதிவேற்ற வேண்டும் என்பதான கட்டாயம் இருந்தது. இந்த நிபந்தனையை EPFO முற்றிலும் நீக்கியுள்ளது.
மத்திய அரசின் தகவலின்படி, இந்த புதிய முறை சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டதில் இருந்து 1.7 கோடி உறுப்பினர்கள் பயன்பெற்றுள்ளனர்.
ஆதார் கார்டு இலவச புதுப்பிப்பு – கடைசி தேதி ஜூன் 14
myAadhaar போர்ட்டல் வழியாக ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிக்க ஜூன் 14 வரை மட்டுமே வாய்ப்பு உள்ளது.
இந்த தேதிக்குப் பிறகு ஆதார் கார்டை ஆன்லைன் புதுப்பிக்க –ரூ.25 கட்டணமாக செலுத்த வேண்டும்.
அதன் பிறகு ஆதார் மையத்தில் ரூ.50 கட்டணம் செலுத்தி தான் புதுப்பிக்க முடியும்.
எனவே, ஆதார் விபரங்களில் திருத்தம் செய்ய திட்டமிட்டுள்ளவர்கள் ஜூன் 14-க்கு முன்னதாகவே புதுப்பிக்கச் செய்யுங்கள்.
வருமான வரி விலக்கு சான்றிதழ் (Form 16) – கடைசி நாள் ஜூன் 15
2024-25 நிதியாண்டிற்கான வருமான வரி தொடர்பான Form 16 சான்றிதழ் ஜூன் 15க்குள் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
Form 16 என்பது ஊழியரின் சம்பளத்திலிருந்து TDS கழிக்கப்பட்டது என்பதை நிறுவனம் வழங்கும் சான்றிதழ்.
இது ஊழியர்கள் தங்களது வருமான வரி தாக்கல் செய்ய தேவையான முக்கிய ஆவணம்.
ஜூன் 15-க்கு முன்னதாகவே இந்த சான்றிதழ் கிடைத்துவிட்டதா என உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கிரெடிட் கார்டு:
நீங்கள் கிரெடிட் கார்டுக்கு ஆட்டோ டெபிட் மூலமாக பணம் செலுத்தி வருகிறீர்கள் என்றால் அதில் தோல்விகள் ஏற்படும் பட்சத்தில் 2 சதவீதம் வரை அபராதம் செலுத்த நேரிடும். சர்வதேச பரிவர்த்தனைகளிலும் இதனால் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
ரெப்போ வட்டி விகிதம்:
இந்திய ரிசர்வ் வங்கியின் கூட்டம் ஜூன் 6-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தின் போது ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து வரும் ஆலோசனைக் கூட்டத்திலும் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் வங்கிகளில் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க நேரிடும். அதே நேரத்தில் வீடு மற்றும் வாகனங்களுக்கான இஎம்ஐ சுலபமாகும்.
ஜிஎஸ்டி இன்வாய்ஸ் எண் மாற்றம் மற்றும் 7,8-வது ஊதியக்குழு உறுப்பினர் நியமனம்;
ஜூன் மாதத்தில் 7, 8-வது ஊதியக்குழு உறுப்பினர் நியமனம் என்பது உறுதி செய்யப்படும் என்று கூறப்படுவதால் ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய திட்டங்களில் மாற்றம் ஏற்படும்.
அதன் பிறகு ஜிஎஸ்டியில் இன்வாய்ஸ் எண்கள் கேஸ்-சென்சிடிவ் அல்லாதவையாக மாற்றப்படும் நிலையில் இது ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி abc, ABC, Abc எல்லாம் ஒரே மாதிரியாக கருதப்படும். மேலும் இந்த இன்வாய்ஸ் எண்கள் தானாகவே பெரிய எழுத்துக்களில் மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.