சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கல்வித்துறை, புள்ளியல் துறை, சமூக நலத்துறை, பத்திரபதிவுத்துறை, ஆவண காப்பகத்துறை, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தேர்தல் பிரிவு, வருவாய் பிரிவு என பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். பத்திரப்பதிவு, ஆதார் திருத்தம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், இசேவை மையம் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக பொதுமக்கள் தினசரி வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், நாள்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உணவு தேடி குரங்குகள் வருகின்றன. உணவு தேடி வரும் குரங்குகள் பல்வேறு துறை அலுவலகத்தில் நுழைந்து அங்குள்ள அலுவலர்கள் உணவுகள் மற்றும் கைப்பைகளை எடுத்து சென்று பையில் உள்ள அனைத்தையும் வெளியே தூக்கி எரிகிறது. மேலும், அங்கு இருக்கக்கூடிய பதிவேடுகளை கிழிப்பது, அரசு ஊழியர்களை அச்சமூட்டுவது உள்ளிட்ட செயல்களில் குரங்குகள் ஈடுபடுகின்றன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குப்பை தொட்டிகளில் உள்ள உணவுகளை எடுக்க முயல்வது என பல்வேறு சேட்டைகளில் குரங்குகள் ஈடுபட்டு வருகின்றன.
இதனால், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குரங்குகளை ஊழியர்கள் விரட்டினால் தங்களை கடிக்க வருவதாகவும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். வனத்துறை அதிகாரிகள் உடனடியாக பணி நேரத்தில் இடையூறாக இருக்கும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட அரசு அலுவலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.