டிரோன் மூலம் ரஷ்ய போர் விமானத்தை தாக்கிய யுக்ரேன் - இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய முக்கிய பாடம் என்ன?
BBC Tamil June 06, 2025 12:48 PM
SBU

2025 ஜூன் 1ஆம் தேதி 100-க்கும் மேற்பட்ட யுக்ரேன் டிரோன்கள், ரஷ்ய விமானப்படை தளங்களில் இருந்த அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஆற்றல் கொண்ட விமானங்கள் மீது தாக்குதல் நடத்தின.

யுக்ரேன் ராணுவ உளவு முகமையான எஸ்பியு, ஊடகங்களுக்கு கசியவிட்ட தகவலின்படி, அந்த டிரோன்கள் மரப்பெட்டிகளில் மறைத்து லாரிகளில் ரஷ்யாவிற்குள் கொண்டு செல்லப்பட்டன. இந்த மரப்பெட்டிகள் தொலைதூரத்திலிருந்து இயக்கப்படும் கூரைக்கு கீழ் மறைக்கப்பட்டிருந்தன.

இந்த லாரிகள் விமான நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. லாரிகளின் ஓட்டுநர்களுக்கு லாரிகளுக்குள் இருந்த பொருட்கள் என்னவென்று தெரியாமல் இருந்திருக்க வாய்ப்புள்ளது. விமான நிலையங்களை அடைந்த பின்னர் டிரோன்கள் இலக்கை நோக்கி செலுத்தப்பட்டன.

117 டிரோன்கள் பயன்படுத்தப்பட்ட இந்த துணிச்சலான தாக்குதலை திட்டமிட ஒரு வருடம் ஆறு மாதம் ஒன்பது நாட்கள் எடுத்ததாக இந்த நடவடிக்கையை மேற்பார்வையிட்டயுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஸெலன்ஸ்கி சமூக வலைதளத்தில் ஞாயிறன்று தெரிவித்தார்.

யுத்தங்களில் டிரோன்கள் பயன்படுத்தப்படுவது குறித்து விவாதிக்கப்படுவது அண்மைக் காலங்களில் இது இரண்டாவது முறை. முன்னதாக இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சண்டையின் போது டிரோன் யுத்தம் குறித்து அதிக அளவில் விவாதங்கள் எழுந்தன.

இந்தியா – பாகிஸ்தான் மோதலின்போது, இது டிரோன் காலம் என கூறக் கூடிய புதிய சகாப்தத்தின் தொடக்கம் என பல வல்லுநர்கள் தெரிவித்தனர். இந்த காலத்தில் மனிதர்கள் அற்ற ஆயுதங்கள் அதாவது டிரோன்கள் யுத்தக்களத்தின் போக்கையும் நிலையையும் தீர்மானிக்கும்.

EPA-EFE/Shutterstock

ஆனால், ரஷ்யாவின் அதிகரிக்கும் தாக்குதலுக்கு மத்தியில், ஜூன் 1ஆம் தேதி ரஷ்யாவுக்கு எதிராக "ஆபரேஷன் ஸ்பைடர் வெப்" -ஐ நடத்தியது. இதுவே ரஷ்யா மீது யுக்ரேன் நடத்திய மிக பயங்கரமான தாக்குதல் என விவரிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலை மேற்கொள்ள யுக்ரேன் கடந்த 18 மாதங்களாக தயார் செய்ததாக சொல்லப்படுகிறது.

எஸ்பியு கசியவிட்ட தகவலின்படி பல சிறிய டிரோன்கள் ரகசியமாக ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டன.

அதன்பின்னர் அவை பல ஆயிரம் மைல்கள் அப்பால் இருக்கும் நான்கு வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அருகே இருக்கும் ராணுவ விமான தளங்கள் மீது தொலைதூரத்திலிருந்து ஏவப்பட்டன.

Getty Images டோனட்ஸ்க் பகுதியில் யுக்ரேன் வீரர்கள் டோம்கா டிரோன்களை இயக்குகின்றனர் எதிர்கால போர்களின் இயல்பை காட்டிய 'ஆபரேஷன் வெப்'

இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து இரண்டு தரப்பும் வெவ்வேறு தகவல்களை வைத்திருக்கின்றன. 40-க்கும் மேற்பட்ட ரஷ்ய போர் விமானங்கள் (தொலைதூரம் தாக்குதல் நடத்தும் ஆற்றல் கொண்ட விமானங்கள்) மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக யுக்ரேன் சொல்கிறது.

நாட்டின் ஐந்து பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், அதில் இரண்டு இடங்களில் விமானங்கள் சேதமடைந்திருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. மற்ற இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டதாக ரஷ்யா தெரிவித்தது. .

இந்த கூற்றுகளை பிபிசி தனிப்பட்ட முறையில் உறுதி செய்யவில்லை. ஆனால் யுக்ரேனின் இந்த தாக்குதல் முன் எப்போதும் நடக்காதது என பாதுகாப்புத்துறை நிபுணர்கள் உறுதி செய்கிறார்கள்.

குறிப்பாக, டிரோன்கள் ரஷ்யாவிற்கு கொண்டு செல்லப்பட்ட விதமும், பின்னர் செயற்கைக்கோள் அல்லது இணைய தொடர்பு மூலம் தொலைதுரத்திலிருந்து இயக்கப்பட்ட விதமும் அசாதாரணமானவை.

தங்களுடைய சொந்த டிரோன் அமைப்புகளை உருவாக்கும் இந்தியா மற்றும் பிற நாடுகள் இந்த நடவடிக்கையிலிருந்து பல விஷயங்களை கற்றுக்கொள்ளமுடியும் என சர்வதேச மற்றும் யுக்தி விவகாரங்கள் நிபுணர் ஸ்வஸ்தி ராவ் சொல்கிறார். எதிர்காலத்தில் நடக்கப்போகும் யுத்தங்களின் இயல்பு எப்படி இருக்கும் என்பதை ஆபரேஷன் 'ஸ்பைடர் வெப்' காட்டுகிறது.

உதாரணமாக தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் பெரிய, சக்திமிக்க நாடுகளை சிறிய நாடுகள் எப்படி வலுவாக எதிர்க்க முடியும் என்பதை காட்டுகிறது. இதைப் போன்ற ஒரு சூழ்நிலையில் இந்தியா இந்த திசையில் தனது நடவடிக்கைகளை வேகப்படுத்த வேண்டும்.

ASISGUARD.COM எறிகுண்டுகளை ஏவும் ஆற்றல் கொண்ட சன்கார் டிரோன். துருக்கியில் தயாரிக்கப்பட்ட இந்த டிரோன்களை பாகிஸ்தான் இந்தியா மீதான தாக்குதல்களில் பயன்படுத்தியதாக இந்தியா கூறியிருந்தது. 'இந்தியா தனது டிரோன் ஆற்றலை வலுப்படுத்த வேண்டும்'

பிபிசியிடம் பேசிய ஸ்வஸ்தி ராவ், "பாதுகாப்புத்துறையில் ஏற்படும் புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு இணையாக இருக்க விரும்பினால் இந்தியா ஒவ்வோர் ஆண்டும் ராணுவ திட்டங்களில் ஏற்படும் தாமதங்களை புறந்தள்ளமுடியாது," என்றார்.

சில நாட்களுக்கு முன்னர்தான், இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங்.

தனக்கு தெரிந்தவரை இதுவரை எந்தவொரு திட்டமும் திட்டமிடப்பட்ட காலத்திற்கு முடிக்கப்படவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

இவற்றை சுட்டிக்காட்டும் ஸ்வஸ்தி ராவ் இந்தியாவின் டிரோன் திட்டம் நிச்சயமாக முன்னேற்றம் கண்டிருப்பதாகவும், ஆனால் அதே நேரத்தில் உலக அளவில் காணப்படும் தரநிலைகளை ஒப்பிடும் போது நாம் போட்டியிலேயே இல்லை என்றும் சொல்கிறார்.

அவர் சொல்கிறார், "பாகிஸ்தானுடனான சமீபத்திய சண்டையின் போது சீனா மற்றும் துருக்கியின் டிரோன்களை நாம் வெற்றிகரமாக அழித்தோம், ஆனால் அவை மிகவும் அடிப்படையான டிரோன்கள். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், உலக அளவில் தொழில்நுட்பம் வளர்கிறது என நாம் எடுத்துக்கொண்டால், ஒரு உயர் தொழில்நுட்ப டிரோன் நம் மீது தாக்குதல் நடத்தினால், மிகப்பெரிய சேதத்தை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது.

"யுக்ரேனின் இந்த நடவடிக்கை அதிக அளவு விவாதிக்கப்பட காரணம் யுக்ரேனுக்கு முறையான விமானப்படையோ ராணுவமோ இல்லாததுதான். அவர்கள் யுத்தத்தில் உள்ளனர். யுத்தத்தில் ஈடுபட்டிருந்த போதே உலகத்தின் இரண்டாவது பெரிய ராணுவ சக்திக்கு அதன் எல்லைக்குள்ளேயே பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இதைப் போன்ற ஒரு டிரோன் அமைப்பை உருவாக்கினர்." என்கிறார் ஸ்வஸ்தி ராவ்.

'ஸ்பைடர் வெப் ஆபரேஷன் தரும் உத்தி ரீதியான பாடங்கள்'

தி செண்டர் ஃபார் ஸ்ட்ராடெஜிக் ஆண்ட் இண்டர்நேஷனல் ஸ்டடிஸ் என்பது பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை குறித்து ஆய்வு நடத்தும் நன்கு அறியப்பட்ட ஒரு சிந்தனைக்குழுவாகும்.

வாத்வானி செண்டர் பார் ஏஐ ஆண்ட் அட்வான்ஸ்ட் டெக்னாலஜி பிரிவில் படித்து வரும் சேர்ந்த கேத்தரின் பாண்டர் யுக்ரேனின் ஸ்பைடர் வெப் நடவடிக்கையிலிருந்து கற்றுக்கொள்ளக் கூடிய உத்திகளை சுட்டிக்காட்டுகிறார்.

"விலை குறைந்த, ஓபன் சோர்ஸ் டிரோன் அமைப்புகளுக்கு பல பில்லியன் டாலர் மதிப்பில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை அழிக்கும் ஆற்றல் இருப்பதை இந்த நடவடிக்கை உறுதி செய்தது." என பாண்டர் எழுதினார்.

"யுக்ரேன் தனது குறிக்கோள்களை அடைய செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தியது, இது டிரோன்களின் தரம் எவ்விதம் இருந்தாலும் துல்லியமான தாக்குதல்களை நடத்த யுக்ரேனுக்கு உதவியது," என எழுதுகிறார் பாண்டர்.

"தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட டிரோன்கள் அல்லது அவற்றை ஏவும் முறை குறித்து ரஷ்யா தெரிந்துகொள்ள முடியாததையும் யுக்ரேன் உறுதி செய்துள்ளது."

Nasir Kachroo/NurPhoto via Getty Images மாறும் யுத்த தன்மைக்கு ஏற்ப இந்தியா தன்னைத் தானே தயார் செய்துகொள்ளவேண்டியது முக்கியம் என பாதுகாப்புத்துறை நிபுணர்கள் நம்புகின்றனர். இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம் என்ன?

பாதுகாப்பு நிபுணர் ராகுல் பேடியின் கூற்றின்படி, யுக்ரேன் தாக்குதலுக்கு பயன்படுத்திய டிரோன்கள் குவாட் காப்டர்கள் என அழைக்கப்படுகின்றன, அவை பார்ப்பதற்கு ஹெலிகாப்டர் போல் இருக்கின்றன.

இவற்றை யுக்ரேன் இருநூறு முதல் நானூறு டாலர்களுக்கு தயாரிக்கிறது. எதிரியை மலிவான தளவாடங்களைக் கொண்டு அதிக ஆற்றலுடன் தாக்கமுடியும் என்பதை இது காட்டுகிறது.

பிபிசியிடம் பேசிய அவர், "இன்றைய காலகட்டத்தில் எதிரியின் எல்லைக்குள் நுழையவோ, நேரடியாக எதிர்கொள்ளவோ அல்லது தீங்கிழைக்கவோ தேவையில்லை. மூன்றாயிரம், நான்காயிரம் கிலோமீட்டர் தொலைவில் அமர்ந்து கொண்டிருக்கும்போதே துல்லியமான தாக்குதலை நடத்தமுடியும். இதை யுக்ரேன் இந்த நடவடிக்கையின் மூலம் நிரூபித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் இந்தியா என்ன கற்றுக்கொள்ள முடியும் என்ற கேள்விக்கு, இந்தியாவின் டிரோன் ஆற்றலும் மிகவும் சிறப்பாக இருப்பதாக தெரிவித்தார்.

ராக்குல் பேடி சொல்கிறார்,"ஆபரேஷன் சிந்தூர் மூலம், பல்வேறு வகையான டிரோன்களை செயல்படுத்தி, பயன்பாட்டுக்கு கொண்டுவரமுடியும் என்பதை நாம் நிரூபித்துள்ளோம். ஆனால் இந்த நடவடிக்கையின் மூலம், பெரிய நாடு மற்றும் சிறிய நாடு இடையிலான இடைவெளியை யுக்ரேன் மங்கச் செய்துள்ளது. எனவே இந்த நடவடிக்கையிலிருந்து இந்தியா கற்றுக்கொள்ளக் கூடிய ஒரே பாடம் வேகமாக மாறும் யுத்தத்தின் இயல்பிற்கு தன்னைத் தானே தயாராக வைத்துக்கொள்வதுதான்."

Getty Images எஃப்.பி.வி டிரோன் 'மேற்கத்திய ஊடகங்கள் பெரிதுபடுத்தி காட்டுகின்றன'

அதே நேரம், இந்த நடவடிக்கையின் வெற்றியை யுக்ரேனும் மேற்கத்திய ஊடகங்களும் பெரிதுபடுத்துவதாக செண்டர் ஃபார் ஏர் பவர் ஸ்டடிஸ்சை சேர்ந்தவரும் பாதுகாப்புத்துறை நிபுணருமான தினேஷ் பாண்டே நம்புகிறார்.

பிபிசியிடம் பேசிய அவர், "ஆபரேஷன் சிந்தூரின் போது தாக்குதல் நடத்தியதாக கூறிய பாகிஸ்தானில் இருக்கும் 9 பயங்கரவாத மறைவிடங்களின் புகைப்படங்களையும் செயற்கைக்கோள் படங்களையும் இந்தியா காட்டியுள்ளது. ஆனால் ரஷ்யாவின் 40 போர் விமானங்கள் மீது யுக்ரேன் நடத்திய தாக்குதலின் புகைப்படங்கள் காட்டப்படாதது ஏன்?"

அதேநேரம், ஃபர்ஸ்ட் பெர்சன் வியூ எனப்படும் முதல் நபர் பார்வை மூலம் யுக்ரேன் நடத்திய டிரோன் தாக்குதல் சிறப்பானது எனவும், ரஷ்யாவின் தரப்பில் பெரிய பாதுகாப்பு குறைபாடு எனவும் அவர் கருதுகிறார். யுக்ரேன் இந்த டிரோன்களை ஃபைபர் ஆஃப்டிக் கேபிள்கள் மூலம் ஏவியதாகவும் அவற்றை இலக்குகளுக்கு வெகு அருகில் வைத்திருந்ததாகவும் அவர் சொல்கிறார்.

அவரை பொருத்தவரை, "நீங்கள் இலக்குக்கு வெகு அருகில் இருக்கும்போது எதிர்வினையாற்றுவதற்கான நேரம் மிகவும் குறைவானது. இது போன்ற சூழ்நிலையில், மிக வேகமாக எதிர்வினையாற்றக் கூடிய டிரோன் அமைப்புகளை நீங்கள் தயாரிக்க வேண்டும்."

இந்தியா 5 எஃப்பிவி டிரோன்களை சேர்த்துள்ளது

இந்தியா டுடேவிடம் பேசிய, வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் நிபுணர் கர்னல்(ஓய்வு) தேவேஷ் சிங் எஃப்.பி.வி.கள் (ஃபர்ஸ்ட் பெர்சன் வியு டிரோன்ஸ்), கவுண்டர் டிரோன்ஸ் மற்றும் வான்வழி பாதுகாப்பு கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை கொண்ட ஒரு எதிர்கால யுத்தத்திற்கு இந்தியா தயாராகி வருகிறது.

இந்தியா 5 எஃப்.பி.வி டிரோன்களை தனது ராணுவத்தில் இந்த வருடம் மார்ச் மாதம் சேர்த்துள்ளது. மொத்தமாக 100 எஃப்.பி.வி.கள் வரும் ஆண்டுகளில் சேர்க்கப்படும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.