நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அனைத்து மாநில அரசுகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு மத்திய சுகாதார துறை அவசரமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், தனி வார்டுகள், வென்டிலேட்டர்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத்துறை அவசரமாக எச்சரிக்கை அனுப்பி அறிவுறுத்தியுள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது மீண்டும் தொற்று பர வரும் நிலையில், இந்தியாவில் அதிகபட்சமாக கேரளாவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதைப் போலவே மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழகம் உட்பட பல மாநிலங்களிலும் தொற்று வேகமாக பரவி வருகிறது.
ஜனவரி 1ம் தேதி முதல் தற்போது வரை கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்திருப்பவர்களில், பெரும்பாலானோர் இணை நோய் உள்ளவர்கள் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தற்போது பரவி வருவது வீரியமில்லாத கொரோனா தொற்று என்பதால் பொதுமக்கள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை எனவும் பொதுஇடங்களில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவும், மாஸ்க் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.