இன்று ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு உகந்த தினம். அதைப் போலவே இன்றைய நாளில் வரும் பிரதோஷம் அத்தனை விசேஷமானது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு நாட்களுக்குப் பிறகு 13ம் நாள் திரையோதசி திதி வருவது வழக்கம். இந்த நாளில் தான் பிரதோஷ தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இன்று ஜூன் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ தினமாக அமைந்திருக்கிறது. இன்றைய தினம் பிரதோஷ நேரமான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான நேரத்தில் சிவ தரிசனம் செய்து வேண்டிக்கொண்டால், இதுவரை செய்த அனைத்து பாவங்களும் தொலைந்து புண்ணியங்கள் பெருகும் என்பது ஆன்மிக அன்பர்கள் வாக்கு.
பிரதோஷ நாட்களில் மாலை நேரங்களில் சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளும் அபிஷேக ஆராதனைகளும் சிறப்பாக நடத்தப்படும். மாலை 4.30 முதல் 6 மணி வரை உள்ள இந்த பிரதோஷ நேரத்தில் தான் நந்தியம் பெருமான் மற்றும் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்படும்.
இன்றைய பிரதோஷ நாளில், விரதம் இருந்து மாலையில் அருகில் உள்ள சிவாலயத்துக்குச் செல்லலாம். இயன்ற அளவு அபிஷேகபொருட்களை வாங்கி கொடுக்கலாம். ஆலயத்தின் ஓரத்தில் அமர்ந்து சிவசிந்தனையுடன் அபிஷேக, ஆராதனைகளில் கலந்து கொண்டு தரிசனம் செய்யலாம்.
நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தைச் சொல்லி சிவபெருமானை மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். ஆலயத்தில் விளக்கேற்றி வழிபடலாம். அதன் பிறகு இயன்றவர்களுக்கு உணவளித்த பின் விரதம் முடிக்கலாம். இதனை செய்ய மனக்குழப்பங்களை போக்கி சிந்தையைத் தெளிவாக்கி, வாழ்வை வளமாக்கித் தருவார் எம்பெருமான். பிரதோஷ நாளில் சிவதரிசனம் செய்வோம். சிந்தையை தெளிவாக்குவோம்.
ஓம் நமசிவாய!!