ரிசர்வ் வங்கியின் பெஞ்ச்மார்க் ரெப்போ விகிதத்தில் ஏற்பட்ட சரிவுக்குப் பிறகு பேங்க் ஆஃப் பரோடா வங்கி இந்த முடிவை எடுத்துள்ளது. பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் திருத்தப்பட்ட BRLLR விகிதம் ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்தை 6.00 சதவீதத்திலிருந்து 5.50 சதவீதமாகக் குறைப்பதைப் பிரதிபலிப்பதாக பேங்க் ஆஃப் பரோடா வங்கி தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்து 5.5 சதவீதமாகக் குறைத்தது. அதே நேரத்தில் ரொக்க இருப்பு விகிதத்தை (CRR) 100 அடிப்படை புள்ளிகள் குறைத்து 3 சதவீதமாகக் வைக்கப்பட்டுள்ளது. இது 2025 பிப்ரவரி மாதம் முதல் ரெப்போ விகிதத்தில் 100 அடிப்படைப் புள்ளிகள் சரிவு ஏற்பட்டுள்ளது.
BRLLR (பரோடா ரெப்போ இணைக்கப்பட்ட கடன் விகிதம்) என்பது பேங்க் ஆஃப் பரோடா வங்கியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வட்டி விகித நிர்ணய முறையாகும். இது வீட்டுக் கடன்கள், தனிநபர் கடன்கள் போன்ற சில்லறை கடன்களுக்கான வட்டியை தீர்மானிக்கப் பயன்படுகிறது. இந்த விகிதம் இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. எனவே ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றும்போது BRLLR விகிதம் அதற்கேற்ப மாறும்.
ரெப்போ வட்டி விகிதம் அதிகரித்தால் BRLLR மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட கடன் வட்டி விகிதங்களும் அதிகரிக்கும். அதேநேரம் ரெப்போ வட்டி விகிதம் குறைந்தால், BRLLR மற்றும் கடன்களுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதங்களும் குறையும். இந்த அமைப்பின் நோக்கம் வட்டி விகிதங்களை மிகவும் வெளிப்படையானதாகவும் சந்தைக்கு ஏற்றதாகவும் மாற்றுவதாகே ஆகும். பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் வட்டி குறைக்கப்பட்டது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகவே, ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைத்தால் வங்கிகளும் தங்களுடைய பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்கும். குறிப்பாக, வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட கடன்களின் வட்டி குறையும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் குறைந்த வட்டியில் கடன் வாங்க முடியும். தற்போது பேங்க் ஆஃப் பரோடா வங்கி வட்டியைக் குறைத்துள்ள நிலையில் மற்ற வங்கிகளும் ஒவ்வொன்றாக தங்களுடைய வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.