ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் கோலாகலம்!
Dinamaalai June 09, 2025 10:48 PM

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் நேற்று வைகாசி திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர்.நவதிருப்பதிகளில் 9-ம் தலமாகவும், குருவுக்கு அதிபதியுமாகவும் ஆழ்வார்திருநகரி ஆதிநாதா் ஆழ்வார் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருத்தலத்தில் மூலவா் ஆதிநாதா் நின்ற திருக்கோலத்திலும், ஆதிநாயகி, குருகூா்வல்லி ஆகிய 2 அம்பாள்களும் அருள்பாலிக்கின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருத்தலத்தில் சுவாமி நம்மாழ்வார் வைகாசி விசாகம் அன்று திருஅவதாரம் செய்தார். அவரது அவதாரத்தை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, நடந்து வருகிறது. முக்கிய விழாக்களில் ஒன்றான மங்களாசாசனம் கடந்த 4 -ந் தேதி நடைபெற்றது. அன்று காலையில் நம்மாழ்வார் நவ திருப்பதி பெருமாள்களுக்கு ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் முன்பு மங்களாசாசனம் செய்தார். பின்னர் சுவாமி நம்மாழ்வாருக்கு மதுரகவி ஆழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 9 பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளும் கருட சேவை நடந்தது.

திருவிழாவின் உச்சநிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூபம் நடந்தது. காலை 4.15 மணிக்கு திருமஞ்சனம், காலை 4.45 மணிக்கு தீபாராதனை, காலை 5.30 மணிக்கு நித்தியல் கோஷ்டி, காலை 6.30 மணிக்கு நம்மாழ்வார் பல்லக்கில் புறப்பட்டு, காலை 7 மணிக்கு நம்மாழ்வார் தேரில் எழுந்தருளினார். 

அவருக்கு பூஜைகள் செய்யப்பட்டு, காலை 7.45 மணிக்கு நாங்குனேரி ஜீயர் ஸ்வாமி வடம் பிடிக்க தேரோட்டம் தொடங்கியது. அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் ‘கோவிந்தா கோபாலா’ கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் மேலரத வீதியில் தொடங்கி வடக்கு ரத வீதி, கீழரத வீதி, தெற்கு ரத வீதி வழியாக காலை 9.30 மணிக்கு நிலைக்கு வந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் குடும்பத்தினருடன் திரண்டிருந்து சாமி தரிசனம் செய்தனர்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.