“குடியால் பறிபோன தந்தையின் உயிர்”… மரணத்திற்கு பிந்தைய விருந்தில் மதுவை தவிர்த்த மகன்… குடும்பத்தையே ஒதுக்கி வைத்த கொடுமை… குடிக்க தண்ணீர் கூட இல்லைன்னு கதறல்…!!!
SeithiSolai Tamil June 10, 2025 05:48 PM

ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கிராம பாரம்பரியத்தை மீறியதாகக் கூறி, ஒரு பழங்குடி குடும்பம் சமூக ரீதியாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சரத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேசபாடா கிராமத்தில் நிகழ்ந்தது.

சந்தால் பழங்குடியினத்தைச் சேர்ந்த 67 வயதான ராம் சோரன் கடந்த மார்ச் 27 அன்று உயிரிழந்தார். மரணத்திற்குப் பிறகு அவரது மகன் சங்க்ராம் சோரன், பாரம்பரியத்தின் படி ஒரு விருந்தை ஏற்பாடு செய்தார். ஆனால் தனது தந்தை மதுபான பழக்கத்தால் இறந்துவிட்டதாகக் கருதி, அந்த விருந்தில் பாரம்பரிய மதுபானமான ‘ஹந்தியா’வை பரிமாறாமல் வைத்தார். இதனை எதிர்க்கும்விதமாக, கிராம மக்கள் அவரது குடும்பத்தை முற்றாகப் புறக்கணித்தனர்.

இதனால், சங்க்ராம், அவரது மனைவி லச்சா மற்றும் மூன்று பிள்ளைகளுக்கு குடிநீர் மற்றும் ரேஷன் பொருட்கள் போன்ற அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டுள்ளன. “கிராமக் கிணற்றிலோ குழாய்க் கிணற்றிலோ நாங்கள் தண்ணீர் எடுக்க முடியவில்லை. கடைகளில் எதுவும் வாங்க முடியவில்லை. எங்களிடம் யாரும் பேசுவதில்லை” என லச்சா கூறினார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். சமுதாய புறக்கணிப்பு சட்ட விரோதம் எனக்கூறி, சரத் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமகாந்த் பத்ரா கிராம மக்களை எச்சரித்துள்ளார். இரண்டு நாட்களில் இந்த பிரச்சனை பேச்சுவார்த்தையால் தீர்க்கப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சமூகத்தில் மதுபான பாரம்பரியம் முக்கியத்துவம் பெறுவது உண்மைதான், ஆனால் அதை கட்டாயமாக்கி ஒருவரின் வாழ்க்கையை பாதிப்பது கேள்விக்குறியாகும். மேலும் தற்போது இந்த சம்பவம் சமூகத்தில் மத அடிப்படையிலான பாகுபாட்டின் பாதிப்பை வெளிக்கொண்டு வந்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.