இந்திரா காலத்தில் அமெரிக்கா போல அதிபர் ஆட்சிக்கு மாற நடந்த முயற்சி - கருணாநிதி என்ன செய்தார்?
BBC Tamil June 10, 2025 05:48 PM
Nora Schuster/Getty Images இந்திரா காந்தி

1970-களின் மத்திய பகுதியில், அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசர காலகட்டத்தில், இந்தியா சிவில் உரிமைகள் மறுக்கப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த சர்வாதிகாரப் போக்கின் திரைக்குப் பின்னால் அவரின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சி நாட்டின் பிம்பத்தை மாற்ற முயன்றது. கட்டுப்பாடுகள் மற்றும் சமநிலையைக் கொண்ட ஜனநாயக நாடாக இல்லாமல், கட்டுப்படுத்தப்பட்ட, அதிகாரம் மையப்படுத்தப்பட்ட ஒரு நாடாக இந்தியா மாறிக் கொண்டிருந்தது என்று வரலாற்று ஆய்வாளர் ஶ்ரீநாத் ராகவன் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

இன் இந்திரா காந்தி அண்ட் தி இயர்ஸ் தட் டிரான்ஸ்ஃபார்ம்டு இந்தியா (In Indira Gandhi and the Years That Transformed India) என்ற புத்தகத்தில் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் அவருக்கு கீழ் செயல்பட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சி விசுவாசிகள் இந்தியாவை அமெரிக்கா பாணியிலான அதிபர் ஆட்சிமுறை கொண்ட நாடாக மாற்ற எப்படி முயன்றனர் என்று எழுதியுள்ளார்.

அத்தகைய சூழல், அதிகாரத்தை மையப்படுத்தி, நீதித்துறையை ஓரங்கட்டியிருக்கும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் இயங்கும் நாடாளுமன்றம் ஒரு வெறும் அடையாளமாகவே திகழ்ந்திருக்கும்.

இந்த முயற்சி பிரான்ஸின் சார்லஸ் டி காலின் நடவடிக்கைகளால் ஓரளவுக்கு ஈர்க்கப்பட்ட ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியாவில் வலுவான குடியரசுத் தலைவர் பதவியை உருவாக்குவதற்கான முயற்சி, நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு அப்பால் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தையே பிரதிபலித்தது. ஆனால் அது முழுமையாக நிறைவேறிவிடவில்லை.

1975ஆம் ஆண்டு அனுபவம் மிக்க ராஜாங்க அதிகாரியும், இந்தியா காந்தியின் விசுவாசியுமான பி.கே. நேரு, இந்திராவுக்கு கடிதம் ஒன்றை எழுதுகிறார். அதில் இருந்து தான் அனைத்தும் தொடங்கியது.

அதில், "மகத்தான தைரியம் மற்றும் மக்களின் ஆதரவால் உருவாக்கப்பட்ட அதிகாரம்," என்று அவசர நிலையை குறிப்பிட்ட அவர், இந்த தருணத்தை இந்திரா சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

நாடாளுமன்ற ஜனநாயகம் நம்முடைய அனைத்து தேவைகளுக்கும் பதில் அளிக்க இயலவில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த அமைப்பு, இந்த நிர்வாகம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் ஆதரவை அதிகமாக நாடியுள்ளது.

"இது பிரபலமடைய விரும்புகிறது. அதே நேரத்தில் அதற்கு பிடிக்காத எதையும் தடுத்து நிறுத்துகிறது," என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவுக்கு என்ன தேவை? என்ற கேள்விக்கான விளக்கத்தை எழுதிய பி.கே.நேரு, மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட குடியரசுத் தலைவர், நாடாளுமன்ற ஆதரவை நாடாத, நாட்டின் நலனுக்காக கடுமையான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட ஒருவர் தேவை என்று குறிப்பிட்டதாக ராகவன் தன்னுடைய புத்தகத்தில் எழுதியுள்ளார்.

இத்தகைய அதிகாரத்தை உருவாக்குவது எப்படி என்று அவர் சுட்டிக்காட்டிய ஒரு எடுத்துக்காட்டு பிரான்ஸில் உருவாகியிருந்த டி காலின் ஆட்சி.

Sondeep Shankar/Getty Images அவசர நிலையின் போது நடைபெற்ற காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் மகன் சஞ்சய் காந்தியுடன் இந்திரா காந்தி

ஒரு வலுவான குடியரசுத் தலைவர் பதவியின் கீழ் அதிகாரங்களை குவிப்பது, ஏழு ஆண்டுகால ஆட்சி, நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்களில் விகிதாச்சார பிரதிநிதித்துவம், குறைவான அதிகாரங்களைக் கொண்ட நீதித்துறை, கடுமையான சட்டங்களால் கட்டுப்படுத்தப்பட்ட ஊடகம் என்ற கோரிக்கைகளை அவர் முன்மொழிந்தார்.

மக்களின் பேச்சுரிமை, சமத்துவம் போன்ற அடிப்படை உரிமைகளை பறிக்க வேண்டும் என்றும் கூட அவர் முன்மொழிந்தார்.

"நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு உங்களுக்கு இருக்கும் போதே, இந்திய அரசியலமைப்பில் இத்தகைய அடிப்படை மாற்றத்தை நீங்கள் கொண்டு வர வேண்டும்," என்று இந்திராவிடம் பி.கே. நேரு வலியுறுத்தினார்.

பி.கே. நேருவின் இந்த முன்மொழிவுகளை அன்று பிரதமருக்கு செயலாளராக பணியாற்றிய பி.என். தார் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்

இந்த யோசனைகளை காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் பேச பி.கே.நேருவுக்கு இந்திரா ஒப்புதல் அளித்தார். எக்காரணம் கொண்டும், இந்த யோசனைகளுக்கு இந்திரா காந்தி ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்டார் என்ற தோரணையோடு பேசக் கூடாது என்ற நிபந்தனையையும் அவர் விதித்திருந்தார்.

Sondeep Shankar/Getty Images இந்திரா காந்தியின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பன்ஸி லால், பிரதமருக்கு வாழ்நாள் அதிகாரம் தேவை என்று கோரிக்கை வைத்தார் வரவேற்பும் எதிர்ப்பும்

ஜெகஜீவன் ராம் மற்றும் அன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஸ்வரன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் இந்த யோசனைகள் வரவேற்பைப் பெற்றன என்று பேராசிரியர் ராகவன் தன்னுடைய நூலில் எழுதுகிறார்.

ஹரியாணாவின் அன்றைய முதல்வர், "இந்த தேர்தல் தொல்லைகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். என்னைக் கேட்டால் வாழ்நாள் முழுமைக்கும் என்னுடைய சகோதரி இந்திரா காந்தி இந்த நாட்டின் குடியரசுத் தலைவராக இருக்க வேண்டும் என்று கூறுவேன். வேறு எதையும் அதன் பிறகு செய்ய வேண்டியதில்லை," என்று தெரிவித்தார்.

அன்று தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த மு.கருணாநிதிக்கு இந்த யோசனைகள் சரியாகப்படவில்லை. அவர் இதனை ஆதரிக்கவில்லை. அன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் இருந்த காங்கிரஸ் அல்லாத இரண்டு முதலமைச்சர்களில் கருணாநிதியும் ஒருவர்.

இந்திராவிடம் பி.கே. நேரு தன்னுடைய அறிக்கையை சமர்ப்பித்த போது, இந்திரா அதற்கு முழு மனதோடு ஒப்புதல் தரும் நிலையில் இல்லை என்று குறிப்பிடும் ராகவன், இதில் உள்ள சாதக பாதகங்களை ஆய்வுக்குட்படுத்துமாறு நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்களிடம் இந்திரா கோரிக்கை வைத்தார் என்றும் குறிப்பிட்டார்.

இதன் பின்னணியில் "எ ஃபிரஷ் லுக் அட் அவர் கான்ஸ்டிடியூசன்: சம் சஜ்ஜஷன்ஸ் (A Fresh Look at Our Constitution: Some suggestions) என்ற ஆவணம் ரகசியமாக உருவாக்கப்பட்டு, நம்பத்தகுந்த ஆலோசகர்களிடம் வழங்கப்பட்டது.

அமெரிக்க அதிபரைக் காட்டிலும் கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட குடியரசுத் தலைவர் என்ற முன்மொழிவு அதில் இடம் பெற்றிருந்தது. மக்கள் பிரதிநிதி மன்றங்கள் மற்றும் நீதித்துறை நியமனங்கள் மீதும் கட்டுப்பாட்டை உள்ளடக்கிய அதிகாரம் அப்பதவிக்கு வழங்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

சட்டங்கள் மற்றும் அரசியலமைப்பை விளக்கும், குடியரசுத் தலைவர் தலைமையிலான "உயர் நீதித்துறை கவுன்சில்" உருவாக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. அது உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்களை ஒன்றுமில்லாமல் செய்வதாக இருந்தது.

பி.கே. காந்தி இந்த ஆவணத்தை தாருக்கு அளித்தார். அதனை "அரசியலமைப்பை ஒரு தெளிவற்ற சர்வாதிகார திசைக்கு மடை மாற்றும் ஆவணம்," என்று அவர் அறிந்தார். அன்றைய காங்கிரஸ் தலைவராக இருந்த டி.கே. பரூவா, 1975-ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் வருடாந்திர நிகழ்வின் போது, இந்திய அரசியலமைப்பை "முழுமையான மறுபரீசிலனைக்கு உட்படுத்த வேண்டும்," என்று கோரிக்கை வைத்தார்.

இந்த யோசனைகளுக்கு முழுமையான செயல் வடிவம் கிடைக்கவில்லை. ஆனால் இதன் நிழல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 42வது திருத்தத்திற்கு வழிவகை செய்தது. 1976-ஆம் ஆண்டு அமலாக்கப்பட்ட இந்த திருத்தச் சட்டம் நாடாளுமன்ற அதிகாரங்களை விரிவாக்கியது. நீதிமன்ற தலையீட்டை கட்டுப்படுத்தியது. அதிகாரத்தை மையப்படுத்தப்பட்ட ஒன்றாக மாற்றியது.

ஐந்து அல்லது ஏழு நீதிபதிகளின் பெரும்பான்மை இருந்தால் மட்டுமே ஒரு சட்டத்தை நீக்க முடியும் என்ற வகையில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை வரம்புக்குட்படுத்தி, அதிகார சமநிலையை பேணுதல் என்ற அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை நீர்த்துப் போகச் செய்[யம் வகையில் அது இருந்தது.

இதுமட்டுமின்றி மாநிலங்களில் ராணுவத்தை கொண்டு வருவதற்கான அதிகாரத்தையும், பிராந்தியங்களை மையமாக கொண்டு அவசர நிலையை பிரகடனப்படுத்துவதற்கான அதிகாரத்தையும், குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்கவும் கூட்டாட்சி அரசுக்கு அதிகாரம் இந்த திருத்தச் சட்டம் அளித்தது. குடியரசுத் தலைவர் ஆட்சியை 6 மாதங்களில் இருந்து ஒரு வருடத்திற்கு நீட்டிக்க இது வழிவகை செய்தது. தேர்தல் விவகாரங்களை நீதித்துறையின் கட்டுப்பாட்டிற்கு வெளியே வைத்தது.

அன்றைய தினம் அதிகாரங்கள் மையப்படுத்தப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இல்லையென்றாலும் அதன் அடிப்படை கூறுகளை இதில் காண முடிந்தது.

"இந்த சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்திற்கு ஆதரவாக அரசியலமைப்பின் சம நிலையை மாற்றிவிடும்," என்று தி ஸ்டேட்ஸ்மென் செய்தித்தாள் எச்சரித்தது.

BBC பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இந்திய அரசியலமைப்பின் 42வது திருத்தம்

இந்திரா காந்தியின் ஆதரவாளர்கள் பலரும் இந்த யோசனைகளுக்கு ஆதரவளித்தனர். இந்திரா காந்தியின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பன்ஸி லால், பிரதமருக்கு வாழ்நாள் அதிகாரம் தேவை என்று கோரிக்கை வைத்தார்.

வட இந்திய மாநிலங்களான ஹரியாணா, பஞ்சாப், உத்தர பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் உறுப்பினர்கள் 1976-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் புதிய அரசியலமைப்பு நிர்ணய சபை வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

"இந்த கோரிக்கையால் அதிர்ச்சி அடைந்த பிரதமர், இந்த கோரிக்கைகளுக்கு முடிவு கட்டும் வகையில் நாடாளுமன்றத்தில் இந்த திருத்த மசோதாவை அமல்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தினார்," என்று ராகவன் எழுதுகிறார்.

1976 டிசம்பரில் இந்த மசோதா இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. 13 மாநில சட்டமன்றங்கள் இதற்கு ஒப்புதல் அளித்து, குடியரசுத் தலைவரால் கையெழுத்திடப்பட்டது.

ஆனால் 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்திரா காந்தி மோசமாக தோற்கடிக்கப்பட்ட பிறகு ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி, முந்தைய ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட சேதாரங்களை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டது.

அரசியலமைப்பின் 43 மற்றும் 44-வது திருத்தச்சட்டத்தின் கீழ், சர்வாதிகார அம்சங்களைக் கொண்ட 42வது திருத்தச்சட்டத்தின் முக்கிய கூறுகள் அனைத்தும் திரும்பப்பெற்றப்பட்டன.

இருப்பினும் ஜனதா கட்சி வெகு சில மாதங்களிலேயே ஆட்சியை இழந்தது. 1980ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திரா காந்தி மீண்டும் ஆட்சி அமைத்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்த போது, குடியரசுத் தலைவருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் யோசனைகளை அவரது கட்சியினர் ஆதரித்தனர்.

1982-ஆம் ஆண்டு அன்றைய குடியரசுத் தலைவராக இருந்த சஞ்சீவ ரெட்டியின் பதவிக்காலம் முடிந்த போது, இந்திரா காந்தி பிரதமர் பொறுப்பில் இருந்து விலகி இந்தியாவின் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்கலாமா என்ற தீவிர யோசனையில் இருந்தார்.

பிற்காலத்தில், அவரின் முதன்மை செயலர் இந்திரா இந்த முடிவை எடுக்க "தீவிரமாக யோசித்தார்", என்று குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சியை சுமந்து சோர்வடைந்து இருந்ததாகவும், அவர் கட்சிக்கு அதிர்ச்சி அளிக்க குடியரசுத் தலைவர் பொறுப்பை பயன்படுத்த யோசித்ததாகவும் அவர் கூறினார்.

ஆனால் இறுதியில் அந்த யோசனையை கை விட்டார். அவருக்கு பதிலாக, உள்துறை அமைச்சராக செயல்பட்ட ஜைல் சிங்கை அவர் அடுத்த குடியரசுத் தலைவராக அறிவித்தார்.

தொடர் முயற்சிகள் பல நடந்த போதும் இந்தியா அதிபர் ஆட்சி முறைக்கு ஆட்படவில்லை. புத்திசாலி அரசியல்வாதியான இந்திரா காந்தி இத்தகைய முடிவு எடுப்பதில் இருந்து பின்வாங்கினாரா? அல்லது இந்திய நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறை தன்னை உறுதிப்படுத்திக் கொண்டுவிட்டதால், பெரியளவிலான மாற்றம் வேண்டும் என்று தேசிய அளவில் தாகம் இல்லாமல் இருந்ததா?

Gamma-Rapho via Getty Images ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் இந்திரா காந்தியுடன் ஜைல் சிங் (1983)

பேராசிரியர் ராகவனைப் பொருத்தவரை 1967-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் போட்டி மிகுந்ததாகவும், நிலையற்றதாகவும், எளிதில் உடைந்துவிடக் கூடிய கூட்டணிகளாலும் நிறைந்திருந்தது. மேலும் 1970-களில் குடியரசுத் தலைவரின் கீழான ஆட்சியை நோக்கி இந்தியா நகர்ந்ததற்கான தடயங்களை காண முடிகிறது.

இதே நேரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா போன்ற அதிபர் பாணி ஆட்சிதான் சரியானதாக இருக்கும் என்ற குரல்களும் எழுந்து வந்தன. இந்த யோசனைகள் தீவிர அரசியல் சிந்தனைகளாக அவசர நிலை காலத்தில் உருப்பெற்றன.

"இந்திராவின் அதிகாரத்தை வலிமையாக்கும் வகையில் இந்த அமைப்பை மாற்றி அமைக்க வேண்டும் என்பது தான் நோக்கமாக இருந்தது. நீண்ட கால நோக்கத்தைக் கொண்டதாக இல்லை. அவரது ஆட்சி காலத்தின் கீழ் ஏற்பட்ட நீடித்த விளைவுகள் பெரும்பாலும் எதிர்பாராதவை," என்று பிபிசியிடம் பேசிய பேராசிரியர் ராகவன் தெரிவிக்கிறார்.

"அவசர நிலையின் போது அவரின் முதன்மை எண்ணமானது குறுகிய காலத்திற்கு மட்டுமே இருந்தது. அவருடைய அதிகாரத்தை காப்பாற்றவும் சவால்களில் இருந்து தப்பிக்கவும் அது தேவைப்பட்டது. 42-வது திருத்தச்சட்டம் அவருடைய வழியில் நீதித்துறையும் வரக் கூடாது என்பதை உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்டது."

அதிபர் பாணி ஆட்சி என்ற எண்ணம் உண்மையில் காங்கிரஸிடம் இருந்து முற்றிலுமாக அழியவில்லை. 1984, ஏப்ரலில் மூத்த அமைச்சர் வசந்த் சாத்தே, பதவியில் இருக்கும் போதே, அதிபர் பாணி ஆட்சிமுறைக்கு ஆதரவாக தேசிய அளவிலான பிரசாரத்தை மேற்கொண்டார்.

ஆனால் 6 மாதங்கள் கழித்து இந்திரா காந்தி அவரது மெய்க் காப்பாளர்களால் டெல்லியில் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருடன் அதிபர் பாணி ஆட்சி என்ற எண்ணமும் சேர்ந்தே மறைந்து போனது. இந்தியா, நாடாளுமன்ற ஜனநாயகத்திலேயே தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.