சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் போட்டிகளில் 18 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்சிபி அணி கோப்பையை வென்றது. இதனையடுத்து நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தில் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி 18 வருடத்திற்குப் பிறகு ஐபிஎல் கோப்பையை வென்றது. இதனையடுத்து ஆர்சிபி அணிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
இதில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அதேநேரத்தில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த கொண்டாட்ட விழாவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் ரசிகர்கள் திரண்டதால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் சின்னசாமி கிரிக்கெட் மைதான நுழைவாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக பலியாகினர்.இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் கர்நாடக மாநில அரசு லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டுள்ள நிலையில் சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததுதான் இந்த விபத்துக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
11 பேர் உயிரிழந்தது குறித்து ஆர்சிபி அணி நிர்வாகி நிகில் சோசாலே, டிஎன்ஏ நிறுவனத்தைச் சேர்ந்த சுனில், கிரண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், 2026 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்கு தடை விதிக்கப்படலாம் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஐபிஎல் வரலாற்றில், ஒரு அணியை தடை செய்வது ஒன்றும் புதிதல்ல. மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டில் 2015 ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.