கேரள மாநிலம் கோழிக்கோடு - கண்ணூர் துறைமுகங்களுக்கு இடையில் சரக்கு கப்பல் ஒன்று நடுக்கடலில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இச்சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து ஜூன் 7ம் தேதி புறப்பட்ட சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் சீன சரக்கு கப்பல், நாளை மும்பையை சென்றடைய இருந்தது.
இந்நிலையில், கேரளாவின் பேய்பூர் கடல் பகுதியில் இருந்து வடக்கே 70 கடல் மைல் தொலைவில் இந்தக் கப்பல் சென்று கொண்டிருந்த போது திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.. தீப்பிடித்த உடனே கப்பலில் இருந்த 18 ஊழியர்கள் கடலில் குதித்து தப்பினர். கடலில் குதித்த 18 ஊழியர்களை மீட்க ஐஎன்எஸ் சூரத் என்ற கப்பல் விரைந்துள்ளது.
தீப்பிடித்த சரக்கு கப்பலில் இருந்து 20 கண்டெய்னர்கள் கடலில் விழுந்தன.கடற்படையினரும், கடலோர காவல் படையினரும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.கப்பலில் மொத்தமாக 22 பேர் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அதில் 5 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். 4 பேர் மாயமாகினர். இதனையடுத்து இந்த 4 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.