இந்தியாவில் உள்ள தென்மேற்கு கொங்கன் மண்டலத்தில் உள்ள கோவா மாநிலத்தில் மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவரை பாஜக அமைச்சர் அவமதித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனால் கோவாவில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
கடந்த சனிக்கிழமை அன்று கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வரும் ருத்ரேஷை சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே அனைவர் முன்னிலையிலும் பயங்கரமாக சத்தம் போட்டார். அதாவது அந்த வீடியோவில், சி.எம்.ஓ யார்? அவர் இங்கே வர சொல்லுங்கள் என அமைச்சர் கேட்டார்.
அதன் பின் நாற்காலியில் இருந்த மருத்துவரை முகமூடி கீழே இறக்குமாறு கடுமையாக கூறினார். பின்னர் “நீ உன் நாக்கை கட்டுப்படுத்த வேண்டும். நீ ஒரு மருத்துவர் என்பதை மறக்கக்கூடாது. நோயாளிகளிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும்” என கோபமாக கூறினார். அதற்கு மருத்துவர் பதிலளிக்க முயன்ற போது மீண்டும் அமைச்சர் “போய்விடு” என கூறி அதட்டினார்.
பின்னர் அவரது இடைநீக்க உத்தரவை பாருங்கள் என தனது சக ஊழியர்களிடம் கூறி உள்ளது வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து மருத்துவர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். மேலும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் அமைச்சரை ராஜினாமா செய்ய கோரிக்கை விடுத்தது.
அதனால் அமைச்சர் உடனடியாக மருத்துவரிடம் பகிங்கரமாக மன்னிப்பு கேட்டார். அந்த நேரத்தில் உடனடியாக கோபமடைந்ததாகவும், மருத்துவர்கள் அனைவரையும் மதிப்பதாகவும், மேலும் மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு மிகுந்த மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகும் என அமைச்சர் கூறினார்.