தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதற்கான சேர்க்கை அறிவிப்பே வெளியிடப்படவில்லை.
இந்தச் சட்டத்தின்கீழ், தமிழக அரசுக்கு மத்திய அரசு விடுவிக்க வேண்டிய ரூ.600 கோடியை விடுவிக்காமல் உள்ளதாகக் கூறிய தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ், இதற்காக தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கின் தீர்ப்பு வெளியாகி, மத்திய அரசிடம் இருந்து தொகை விடுவிக்கப்பட்ட பிறகு, தனியார் பள்ளிகளில் கட்டணமின்றி ஏழை மாணவர்கள் சேர்க்கப்படுவர் என்று கூறியுள்ளார்.
இதனால் இந்த ஆண்டில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் புதிய சேர்க்கை இருக்க வாய்ப்பில்லை என்பதோடு, ஏற்கெனவே இந்த இடஒதுக்கீட்டில் சேர்ந்து படித்து வரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணமும் செலுத்தப்படாததால் மூன்றரை லட்சம் மாணவர்கள் தொடர்ந்து படிப்பதும் கேள்விக்குறியாக இருந்தது.
இந்நிலையில் இதுதொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு நேற்று (ஜூன் 10) வெளியானது. அதில், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தமிழக அரசுக்குத் தரவேண்டிய நிதியை விடுவிப்பதைப் பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கும் இடமளிக்கும் வகையில், கடந்த 2009ஆம் ஆண்டில் இந்தியாவில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 (The Right of Children to Free and Compulsory Education Act, 2009) கொண்டு வரப்பட்டது.
அதற்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்த இந்தச் சட்டத்தின்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் பாலர் வகுப்பில் இருந்து (LKG) எட்டாம் வகுப்பு வரை, மொத்தமுள்ள மாணவர் சேர்க்கையில் 25 சதவிகிதம் இடங்களை ஏழை மாணவர்களுக்கு இலவசமாக ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டது.
இந்த மாணவர்களுக்கான கட்டணத்தை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மாநில அரசு வழங்கும். இந்தத் தொகையில் எவ்வளவு தொகையை வழங்கலாம் என்று மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வாரியம்தான் (PAB-Project Approval Board) ஒப்புதல் அளிக்க வேண்டும். அவ்வாறு அனுமதிக்கப்படும் தொகையில் 60 சதவிகித தொகையை மத்திய அரசு வழங்கும்.
தமிழகத்தில் 12,970 தனியார் பள்ளிகள் இயங்குவதாகவும், அவற்றில் 63.42 லட்சம் மாணவர்கள் பயில்வதாகவும் சொல்கிறது தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை இணையதளம். ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, மாணவர்களுக்கான சேர்க்கை அறிவிக்கை மற்றும் விண்ணப்பத்தை அந்தந்த மாநிலத்தில் உள்ள பள்ளிக்கல்வித் துறை வெளியிட வேண்டும்.
அதில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் அந்தந்தப் பள்ளிகளில் தேர்வு செய்து, இச்சட்டத்தின்படி மாணவர் சேர்க்கையை நிறைவு செய்ய வேண்டும். வழக்கமாக, தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில்தான் (rte.tnschools.gov.in) இதற்கான அறிவிக்கையும், பள்ளிகளில் சேர்வதற்குரிய விண்ணப்பமும் வெளியிடப்படும். அதில் பெற்றோர் விண்ணப்பித்த பிறகு, அந்தந்த பள்ளிகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்படும்.
ஒரு பள்ளியில் 25 சதவிகித இடத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வந்திருந்தால் குலுக்கல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு மாணவர் சேர்க்கை நடக்கும். ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரலில் துவங்கி மே 3ஆம் வாரத்துக்குள் இந்த நடவடிக்கைகள் நிறைவு பெறும். கடந்த ஆண்டில் இந்த மாணவர் சேர்க்கை ஏப்ரல் 22 துவங்கி மே 20ஆம் தேதி முடிவடைந்தது.
ஆனால் இந்த ஆண்டில் கோடை விடுமுறை முடிவடைந்து, கடந்த ஜூன் 2 அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுவிட்ட நிலையில், இப்போது வரையிலும் இதற்கான அறிவிக்கை மற்றும் விண்ணப்பங்கள், தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. இதற்காக தமிழகம் முழுவதும் பல லட்சம் பெற்றோர்கள் காத்திருந்து ஏமாற்றமடைந்துள்ளனர்.
கட்டாயக் கல்வி சட்டத்தின்படி மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பை உடனே வெளியிட வலியுறுத்தி, கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் கடந்த ஏப்ரலில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் பிறகு இந்த அமைப்பின் தலைவர் ஈஸ்வரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வால் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதில் தமிழக அரசின் சார்பில் சில விவரங்கள், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. அதில், கடந்த 2021–2022ஆம் ஆண்டில் இருந்து 2024–2025 வரையிலான நான்கு ஆண்டுகளாக கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் சேர்க்கப்பட்ட மாணவர்கள், ஒன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை, அவர்களுக்காக பள்ளிகளுக்குச் செலுத்த வேண்டிய தொகை, மத்திய அரசின் பங்களிப்பு நிதி, மாநில அரசு வழங்கிய நிதி குறித்த விவரங்கள் அதில் இடம் பெற்றிருந்தன.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின்படி, கடந்த 2021–2022 கல்வியாண்டில் 7,745 பள்ளிகளில் 1,21,208 குழந்தைகள், பாலர் வகுப்புகளில் சேர்க்கப்பட்டனர். அப்போது 1–8ஆம் வகுப்பு வரை 2,77,185 மாணவர்கள் படித்து வந்தனர். அந்த ஆண்டில் பாலர் வகுப்பு மாணவர்களுக்காக ரூ.98.43 கோடியும், பிற மாணவர்களுக்காக ரூ.266 கோடியும் கட்டணமாகச் செலுத்த வேண்டியிருந்தது.
ஆனால் ரூ.256.17 கோடிக்கு மட்டுமே வாரியம் (PAB) ஒப்புதல் அளித்தது. அதில் மத்திய அரசு 60 சதவிகிதத் தொகையான ரூ.153.70 கோடி வழங்கியிருக்க வேண்டும். இப்போது வரையிலும் அந்தத் தொகையை மத்திய அரசு வழங்கவில்லை. இருப்பினும் அந்த ஆண்டில் ரூ.363.43 கோடியை பள்ளிகளுக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறை சமர்ப்பித்துள்ள தரவுகளின்படி, பாலர் பள்ளி மாணவர்களுக்கான தொகை முழுவதையும் தமிழக அரசே வழங்கி வருகிறது. பிற மாணவர்களுக்கான கட்டணத் தொகையில் மட்டுமே 60 சதவிகிதத்தை மத்திய அரசு வழங்குகிறது.
இருப்பினும் 2022–2023 கல்வியாண்டில் 7,769 பள்ளிகளில் பாலர் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட 1,18,582 குழந்தைகள், மற்ற வகுப்புகளில் படித்து வந்த 2,98,486 பேர் ஆகியோருக்கான கட்டணமாக, ரூ.383.59 கோடியை பள்ளிகளுக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது. அதிலும் வாரியம் ஒப்புதல் அளித்த தொகையில் மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.188.99 கோடி இதுவரை தமிழக அரசுக்கு வழங்கப்படவில்லை.
அதன் பின் 2023–2024, 2024–2025 ஆகிய இரு கல்வி ஆண்டுகளிலும், பள்ளிகளுக்குச் செலுத்த வேண்டிய தொகையில் மத்திய அரசால் வழங்க வேண்டிய ரூ.208.20 கோடி, ரூ.222.60 கோடி ஆகிய தொகையும் இதுவரை விடுவிக்கப்படவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
அதேபோன்று, கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை தமிழக அரசும் வழங்கவில்லை என்பதும் மாநில அரசால் நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது.
மத்திய அரசு ஏன் நிதியை ஒதுக்கவில்லை என்று நீதிபதிகள் கேட்டதற்கு, இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் வாதாடிய சுந்தரேசன், பாபு ஆகியோர், புதிய கல்விக் கொள்கை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடாத காரணத்தால், நிதி வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று, இந்த மாணவர் சேர்க்கை தொடர்பாக மே 28 அன்று தமிழக அரசு கூடியிருந்த கூட்டத்தின் தீர்மானத்தையும் நீதிபதிகள் கேட்டிருந்தனர். இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்துள்ள நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷிடம், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், இந்த ஆண்டில் மாணவர் சேர்க்கை நடக்காதது குறித்துக் கேள்வி எழுப்பியதற்கு, ''கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தமிழக அரசுக்கு மத்திய அரசு ரூ.600 கோடியை விடுவிக்க வேண்டியுள்ளது. இதை வழங்க மத்திய அரசிடம் தமிழக அரசால் வலியுறுத்தப்பட்டுள்ளது. முதல்வர் உத்தரவின்படி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது'' என்று கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு வந்த பிறகு, மத்திய அரசால் அந்தத் தொகை விடுவிக்கப்பட்ட பிறகு, தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர் சேர்க்கை துவங்கும் என்றும் அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இதன் மூலமாக இந்த ஆண்டில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை இனி இருக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஏற்கெனவே பள்ளிகள் தொடங்கிவிட்ட நிலையில், இந்த அறிவிப்புக்காக இப்போது வரை எந்தப் பெற்றோரும் காத்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை இருக்க வாய்ப்பில்லை என்பதே இதற்காகக் காத்திருந்த பெற்றோர் பலரின் கருத்தாக உள்ளது.
இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, அரசியல்ரீதியாகவும் இந்த விவகாரம் சூடுபிடித்தது. அதிமுக ஆட்சியில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட 25 சதவிகித ஏழை மாணவர்களுக்கான கட்டணத்தையும் மாநில அரசே முழுமையாகச் செலுத்தியதாகவும், தற்போது அதை ஒதுக்காமல் மத்திய அரசு மீது திமுக அரசு பழி போடுவதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டியிருந்தார்.
தற்போது இந்த நிதிக்காக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளதைக் குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ''கடந்த ஆண்டிலேயே இதற்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்குமாறு நான் வலியுறுத்தினேன். மத்திய அரசிடம் நிதி பெறுவதில் தமிழக அரசு தோல்வி அடைந்ததற்காக ஒரு லட்சம் ஏழை மாணவர்களின் கல்வி வாய்ப்பை பறிக்கக்கூடாது. இந்தச் சட்டத்தின்படி மாணவர் சேர்க்கையை உடனே துவக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
உண்மையில் இந்த ஆண்டில் புதிதாகச் சேர்வதற்குக் காத்திருந்த ஒன்றரை லட்சம் மாணவர்களுடன், இந்தச் சட்டத்தின் கீழ் ஏற்கெனவே ஒன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மூன்றரை லட்சம் மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் மனுதாரர் ஈஸ்வரன். கடந்த ஆண்டிலேயே இதற்காக வழக்குத் தொடுத்திருக்க வேண்டுமென்ற கருத்தையே இவரும் வலியுறுத்துகிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய மனுதாரர் ஈஸ்வரன், ''மத்திய அரசின் அப்பட்டமான புறக்கணிப்பாலும், மாநில அரசின் மெத்தனத்தாலும் தமிழகத்தில் 5 லட்சம் ஏழை மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி இருக்கிறது. கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் மாணவர் சேர்க்கையை உடனே துவக்க வலியுறுத்தி நான் மனு தாக்கல் செய்த பிறகே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. பள்ளிகள் துவக்கப்பட்ட பின்பு, தீர்ப்பு வந்து, நிதி வந்த பிறகு மாணவர் சேர்க்கை துவங்கும் என்று அமைச்சர் மகேஷ் பேசுவது முற்றிலும் பொறுப்பற்ற பேச்சு. தனியார் பள்ளிகளுக்கு ஆதரவான நடவடிக்கை'' என்கிறார்.
அதோடு, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், இந்த ஆண்டில் புதிய மாணவர் சேர்க்கை தடைபட்டிருப்பது ஒரு புறமிருக்க, ஏற்கெனவே இந்த இட ஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களுக்கும் கல்விக் கட்டணத்தை தமிழக அரசு செலுத்தவில்லை என்றும் ஈஸ்வரன் குற்றம் சாட்டுகிறார். இதனால் இந்த மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாகவும் அவர் கூறுகிறார்.
'கட்டணம் செலுத்தினாலும் ரசீது கிடையாது'மனுதாரர் கூறும் தகவல் பற்றி ஆய்வு செய்வதற்காக, இந்த இட ஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் சிலரிடம் பிபிசி தமிழ் பேசியது. அப்போது இந்தத் தகவலை உறுதி செய்த பெற்றோர் பலரும், தங்கள் பெயரை வெளியிட மறுத்து, இந்தக் கட்டணத்தைச் செலுத்துமாறு பள்ளி நிர்வாகம் வலியுறுத்தியதன் பேரில் தாங்கள் அந்தக் கட்டணத்தைச் செலுத்திவிட்டதாகத் தெரிவித்தனர்.
கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்த ஒருவர், ''எனது மகன் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளியில் படித்து வருகிறான். அவனுக்கு இப்போதே கட்டணம் செலுத்த வேண்டுமென்று சொன்னதால் வேறு வழியின்றி கஷ்டப்பட்டு கட்டணத்தைச் செலுத்திவிட்டோம். ஆனால் அதற்கு ரசீது தரவில்லை. அரசிடம் இருந்து பணம் வந்த பிறகு அந்தத் தொகையைத் திருப்பித் தருவதாகக் கூறியுள்ளனர். எப்போது வழக்கு முடிந்து அரசு கொடுத்து, இந்தத் தொகை திரும்ப வரும் என்று தெரியவில்லை'' என்றார்.
இந்த விவகாரத்தில் ஏழை மாணவர்களின் பெற்றோர் மட்டுமின்றி, தனியார் பள்ளி நிர்வாகங்களும் பாதிக்கப்படுவதாகக் கூறுகிறார் மனுதாரர் ஈஸ்வரன். ஏனெனில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இந்த இடஒதுக்கீட்டில் 25 சதவிகித இடங்கள் நிரப்பப்படாவிடில் 6 மாதங்கள் வரை அந்த இடங்களைக் காலியாக வைத்திருக்க வேண்டுமென்று கூறும் ஈஸ்வரன், அது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வாங்கிய தகவலையும் பிபிசி தமிழிடம் பகிர்ந்தார்.
ஆனால் 6 மாதங்கள் வரை அந்த இடங்களை காலியாக வைத்திருக்க இயலாது என்கிறார் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் நந்தகுமார். இதுதொடர்பாக இன்னும் பள்ளி நிர்வாகங்கள் தரப்பில் கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
பிபிசி தமிழிடம் பேசிய நந்தகுமார், ''இந்த ஆண்டில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் சேர்க்கை இப்போது கிடையாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு முடிந்து, தமிழக அரசுக்கு தொகை வரும் வரையிலும் ஒவ்வொரு பள்ளியிலும் 25 சதவிகித இடங்களைக் காலியாக வைத்திருப்பது நடைமுறையில் சாத்தியமில்லை'' என்றார்.
தமிழகத்தைச் சேர்ந்த 5 லட்சம் ஏழை மாணவர்களின் கல்வி சார்ந்த விஷயம் என்பதால் இந்த விஷயத்தில், மத்திய அரசும் பிடிவாதம் பிடிக்கக்கூடாது என்று வலியுறுத்தும் மனுதாரர் ஈஸ்வரன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கில் வெற்றி பெற்று வட்டியுடன் பணம் திரும்பக் கிடைக்குமென்ற நம்பிக்கை இருப்பதாகவும் அதற்காக தமிழக அரசுடன் இணைந்து போராடத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில் ஈஸ்வரன் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை முடிவடைந்து, நேற்று (ஜூன் 10) தீர்ப்பு வெளியிடப்பட்டது. மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் உள்ள நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் தனது தீர்ப்பை இணையம் வழியாகப் பகிர்ந்தபின், சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து நீதிபதி லட்சுமி நாராயணன் தீர்ப்பை வாசித்தார்.
இந்தத் தீர்ப்பில், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று கூறியுள்ள நீதிபதிகள், அதை நிறைவேற்றும் பொறுப்பு, மத்திய, மாநில அரசுகள் இரண்டுக்கும் உள்ளது என்று கூறியுள்ளனர். எனவே இந்தச் சட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க உத்தரவிட்டுள்ளனர்.
தீர்ப்பு பற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய மனுதாரரின் வழக்கறிஞர் பொன்ராஜ், ''புதிய தேசிய கல்விக் கொள்கை சார்ந்த ஒப்பந்தத்தையும், கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட நிதியையும் ஒன்றாகச் சேர்க்கக்கூடாது என்று நீதிபதிகள் தெளிவாகக் கூறியுள்ளனர். அதே நேரத்தில் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தில் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதி குறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு குறித்து எந்த அறிவுறுத்தலையும் தாங்கள் வழங்கவில்லை என்பதையும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்'' என்று தெரிவித்தார்.
கடந்த கல்வி ஆண்டுக்கு (2024–2025) சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தைத் தமிழகத்தில் செயல்படுத்த மொத்தத்தில் ஒதுக்கப்பட வேண்டிய ரூ.3585.99 கோடியில், மத்திய அரசின் பங்களிப்பு ரூ.2,151.59 கோடி என்று குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், இதில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ரூ.200 கோடியை வழங்குவதில் மத்திய அரசுக்கு எந்தவிதத் தடங்கலும் இல்லை என்று கூறியுள்ளனர். அத்துடன் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட நிதியை, சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தில் இருந்து நீக்குவது குறித்தும் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டுமென்றும் தீர்ப்பில் அறிவுறுத்தியுள்ளனர்.
அது மட்டுமின்றி, மத்திய அரசின் நிதி கிடைக்கவில்லை என்று காரணம் கூறி, தனியார் பள்ளிகளுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை தமிழக அரசு மறுக்கக்கூடாது, அதற்குரிய சட்டபூர்வமான கடமையில் இருந்து விலகக்கூடாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மனுதாரர் ஈஸ்வரன், ''மத்திய அரசின் நடவடிக்கையால் 10 ஆயிரம் கோடி ரூபாயை இழந்தாலும் கொள்கைக்காக அதை ஏற்றுக்கொள்வோம் என முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 5 லட்சம் ஏழை மாணவர்கள் படிப்பதற்கு 300 கோடி ரூபாய்தான் தேவை. அந்த இழப்பை ஏற்றுக்கொண்டு, இந்தச் சட்டத்தின்கீழ் மாணவர் சேர்க்கையை உடனே துவக்குமாறு நாங்கள் தமிழக அரசிடம் கோரியிருந்தோம். இப்போது வந்துள்ள தீர்ப்பால் எப்படியும் இந்த நிதி வருவது உறுதியாகிவிட்டது. அதனால் இனியும் தாமதிக்காமல் இந்த ஆண்டுக்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கையை தமிழக அரசு உடனே வெளியிட வேண்டும்'' என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு