கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவில், பெண்களை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தமிடும் சைக்கோ ஒருவரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பூங்காக்கள் மற்றும் சாலைகளில் இந்தத் துயரமான சம்பவங்கள் நடந்து வந்தன.
பெங்களூரு புலிகேசி நகர் பகுதியில் உள்ள பூங்காவில், ஜூன் 6ஆம் தேதி ஒரு பெண்ணிடம் நெருங்கிய நதீம் என்பவர், அவரை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து உதடுகளில் முத்தமிட்டார். அதேபோல், அங்கு வந்த மற்றொரு பெண்ணையும் அவர் தாக்கினார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், உடனடியாக புலிகேசி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
விசாரணையில், நதீம் கடந்த சில நாட்களில் பல இடங்களில் இதேபோன்று பெண்களை வலுக்கட்டாயமாக கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. பனஸ்வாடி, புலிகேசி நகர் உள்ளிட்ட பகுதிகளில், தெருவிலும், பூங்காக்களிலும் அவர் இந்த செயலை தொடர்ந்து செய்துள்ளார். ஒரு மோமோஸ் கடைக்கு அருகிலும், மற்றொரு சந்தையில் நின்ற பெண்ணையும் அவர் முத்தமிட்டுள்ளார்.
நதீம், போலீசாரிடம் நடந்த விசாரணையில், “நான் அடிக்கடி ஆபாச படங்களைப் பார்ப்பேன். அதுக்குப் பிறகு சாலையிலும் பூங்கையிலும் பெண்களை கட்டிப்பிடிக்கும் ஆசை வரும். அதனால்தான் இந்த செயல்களை செய்தேன்” என ஒப்புக்கொண்டார். மேலும், அவர் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றியவர் என்றும், தற்போது வேலை இழந்த நிலையில் உள்ளவராகவும் தெரியவந்தது.
போலீசார் நதீமைக் கைது செய்த நிலையில், அவர் தற்போது புலிகேசி நகர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.