போயிங் விமானத்தின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய உத்தரவு
Top Tamil News June 14, 2025 03:48 AM

போயிங் விமானத்தின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் பகல் 1.17 மணிக்கு  லண்டன் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது. விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது தூரத்திலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்து, விமான நிலையம் அருகே மேகானி நகர் குடியிருப்பு பகுதியில்   கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.  சரியாக 1.20 மணிக்கு கிட்டத்தட்ட 3 நிமிடங்களுக்குள்ளாக இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. விமானத்தில் இரண்டு விமானிகள், பத்து விமான பணியாளர்கள் உட்பட 242 பேர் பயணித்து உள்ளனர். விமானம் மேகானி நகரில் அமைந்துள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்து நொறுங்கியது. விமானத்தில் சுமார் 90டன் வெள்ளை எரிபொருள் இருந்ததால் விமானம் விழுந்த உடனேயே வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரியத்தொடங்கியது.  இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 11A இருக்கையில் பயணித்த, பிரிட்டன் குடியுரிமை பெற்ற விஸ்வாஸ் ரமேஷ் குமார் என்பவர் உயிர் பிழைத்துள்ளார். 

ஏர் இந்தியாவின் போயிங் 787 ரக விமானம் நேற்று விபத்திற்குள்ளான நிலையில் மற்ற ஏர் இந்தியா இயக்கும் போயிங் வகை  விமானங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. போயிங் 787, 788 மற்றும் 789 ஆகிய 3 போயிங் ரக விமானங்களை உடனடியாக தரையிறக்கி ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளது. போயிங் விமானத்தை 4 வகையான ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே பறக்க அனுமதிக்க சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் ஆணை பிறப்பித்துள்ளது. ஹைட்ராலிக் சோதனை உட்பட 6 வகையான சோதனைகளை விமான நிறுவனங்கள் நாள்தோறும் மேற்கொள்ள வேண்டும் என்றும், விமான கட்டுப்பாட்டு ஆய்வு அறிக்கையை 2 வாரங்களுக்கு ஒருமுறை DGCAக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் DGCA உத்தரவிட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.