இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் ராஜஸ்தானை சேர்ந்த மகேஷ் குமார் முதலிடத்தைப் பிடித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த உத்கர்ஷ் அவாதியா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்த ஆண்டு மொத்தம் 2276069 பேர் நீட் தேர்வுக்கு பதிவு செய்தனர், அதில் 2209318 பேர் தேர்வு எழுதினர். இதில் மொத்தம் 1236531 பேர் மருத்துவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 514063 பேர் ஆண்கள், 722462 பேர் பெண்கள் மற்றும் 6 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவர்.
ஆண்களில் ராஜஸ்தானைச் சேர்ந்த மகேஷ் குமார் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார், அவர் 99.9999547 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். பெண்களில் டெல்லியைச் சேர்ந்த அவிகா அகர்வால் முதலிடம் பிடித்துள்ளார். அவர் இந்திய அளவில் 99.9996832 சதவீத மதிப்பெண்களைப் பெற்று 5ம் இடம் பிடித்துள்ளார்.
இந்த ஆண்டு இளநிலை நீட் தேர்வு எழுதிய 22.09 லட்சம் பேரில் 12.36 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு 13.15 லட்சம் ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு குறைந்துள்ளது. அதே நேரத்தில் கடந்த ஆண்டில் தேர்வு எழுதியோர் எண்ணிக்கை 23.33 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தது.
நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வி ஆண்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 4-ம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து இளநிலை நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதன் முடிவுகளை neet.nta.nic.in, exams.nta.ac.in ஆகிய தளங்களில் அறிந்துகொள்ளலாம். அதேபோல அனைத்து விண்ணப்பதாரர்களும் மதிப்பெண் தகவல்களை தங்களின் மின்னஞ்சல் மூலமாக தெரிந்துகொள்ளலாம் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
மேலும், மதிப்பெண்கள் தொகுக்கப்பட்டதன் அடிப்படையில் நீட் யுஜி 2025-க்கான இறுதி விடைக்குறிப்பையும் தேர்வெழுதியவர்கள் சரிபார்க்கலாம். இந்த தேர்வில் தகுதி பெற்றவர்கள் இந்தியா முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஸ் மற்றும் பிற இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கு நீட் தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை பெற வேண்டும். அதன்படி 2024 ஆம் ஆண்டில், பொதுப் பிரிவு போட்டியாளர்களுக்கான தகுதி 50% ஆகவும், ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவுகளுக்கான தகுதி 40% ஆகவும் இருந்தது. பொது-பிடபிள்யூடி பிரிவைச் சேர்ந்த போட்டியாளர்கள் குறைந்தபட்சம் 45% மதிப்பெண்கள் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான 'நீட்-யூஜி 2025' தேர்வை சுமார் 20 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்தத் தேர்விற்கான தற்காலிக விடைக் குறிப்பை தேசிய தேர்வு முகமை கடந்த 3ம் தேதி வெளியிட்டது.
இந்நிலையில், நீட்-யூஜி 2025 தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை தற்போது இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 22,09,318 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில், 12,36,531 மாணவர்கள் தகுதி மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை, 1,35,715 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். இதில் 76,181 மாணவர்கள் தகுதி மதிப்பெண்களை பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 26,580 மாணவர்கள் தமிழ் வழி கேள்வித்தாள் மூலமாக நீட் தேர்வு எழுதினர். தமிழகத்தில் நெல்லையை சேர்ந்த மாணவர் எஸ்.சூர்ய நாராயணன் 99.9987779 சதவீதம் பெற்று மதிப்பெண் தரவரிசையில் 27-வது இடம் பிடித்துள்ளார். இதேபோல், அபிநீட் நாகராஜ் 99.9974653 சதவீதம் பெற்று 50-வது இடத்தையும், ஜி.எஸ்.புகழேந்தி 99.9972390 சதவீதம் பெற்று 61-வது இடத்தையும், கே.எஸ்.ஹிருதிக் விஜயராஜா 99.9971484 சதவீதம் பெற்று 63-வது இடத்தையும், ஏ.ஜெ.ராகேஷ் 99.9964242 சதவீதத்துடன் 78-வது இடத்தையும், ஜி.பிரஜன் ஸ்ரீவாரி 99.9958811 சதவீதம் பெற்று 88-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இந்த வகையில், நீட் தேர்வு மதிப்பெண் பட்டியலில், முதல் 100 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் இடம்பிடித்துள்ளனர்.