உலக நாடுகளிடம் எவ்வளவு அணு ஆயுதங்கள் உள்ளன? ஈரானுக்கு மட்டும் எதிர்ப்பு நிலவுவது ஏன்?
Webdunia Tamil June 18, 2025 08:48 PM

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் வலுபெற்று வரும் நிலையில் ஈரான் அணு ஆயுத தயாரிப்புக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. உலக நாடுகள் பலவும் அணு ஆயுதங்கள் வைத்திருக்கும்போது ஈரானுக்கு இவ்வளவு எதிர்ப்புகள் எழுவது ஏன்?

1945ம் ஆண்டு ஜப்பானில் வீசப்பட்ட அணுக்குண்டுகளால் உலக நாடுகள் சக்திவாய்ந்த அணு ஆயுதத்தின் வீரியத்தைக் கண்டு கொண்டன. அதை தொடர்ந்து வல்லரசு நாடுகள் அனைத்தும் தங்கள் பாதுகாப்பிற்காக அணு ஆயுதங்களை வேகமாக தயாரிக்கத் தொடங்கின. இதனால் மிகப்பெரிய உலக அழிவு ஏற்படும் என 1968ம் ஆண்டில் பல நாடுகளும் இணைந்து அணு ஆயுத பரவலாக்கலை தடுக்கும் ஒப்பந்தத்தை கொண்டு வந்தன. இதில் ஏற்கனவே அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு, மற்ற நாடுகள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை தடுப்பதற்காக கையெழுத்திட நிர்பந்திக்கப்பட்டன.

ஆனால் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் அண்டை நாடுகளில் அணு ஆயுதங்கள் உள்ளதன் ஆபத்தை காட்டி ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து வந்தன. பின்னாளில் 191 நாடுகளால் இந்த ஒப்பந்தம் ஏற்கப்பட்டது.

தற்போதைய நிலவரப்படி, அதிக அணு ஆயுதங்களை வைத்திருப்பது ரஷ்யாதான். ஆவணங்களின்படி ரஷ்யாவிடம் 5,459 அணு ஆயுதங்கள் உள்ளது. அடுத்தபடியாக, அமெரிக்காவிடம் 5,177 அணு ஆயுதங்கள் உள்ளன. சீனா 600, பிரான்ஸ் 290, இங்கிலாந்து 225, இந்தியா 180, பாகிஸ்தான் 170, இஸ்ரேல் 90 அணு ஆயுதங்களை வைத்துள்ளன.

அணு ஆயுத கட்டுப்பாடு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய வட கொரிய பல கணக்கீடுகளின்படி 50 அணு ஆயுதங்கள் வைத்திருந்த நிலையில் தற்போது அந்நாட்டின் அனைத்து தகவல்களும் ரகசியமாக உள்ளதால் மேலும் அதிகமான அணு ஆயுதங்களை வைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தற்போது ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பில் ஈடுபடுவதாகவும், அதை நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்கா எச்சரித்து வருவதன் காரணமே, ஈரான் நாட்டின் பயங்கரவாத தொடர்புகள்தான். மத்திய கிழக்கில் அமெரிக்காவுடன் நல்லிணக்கத்துடன் இருக்கும் சவுதி அரேபியா, சிரியா உள்ளிட்ட நாடுகளை கூட அச்சுறுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தொடங்கி லெபனானின் ஹெஸ்புல்லா, காசாவின் ஹமாஸ் என பல பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு வழங்குவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் ஈரானிடம் அணு ஆயுதங்கள் அதிகமானால் அது பயங்கரவாத கும்பல்களின் கையில் கிடைத்தால் உலகம் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்பதே ஜி7 வல்லரசு நாடுகள் இந்த போரில் கவனம் செலுத்த காரணமாக அமைகின்றது.

Edit by Prasanth.K

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.