காங்கிரஸ் கட்சியின் மேலிடத்துடன் தனக்கு சில கருத்து வேறுபாடுகள் உள்ளதாக அக்கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் குறிப்பிட்டுள்ளார்.
திருவனந்தபுரம் எம்.பி.,யாக இருக்கும் சசி தரூர், சமீப காலமாக பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் பாராட்டி பேசி வருகிறார். இதற்கு காங்கிரஸ் கட்சியை அதிருப்தி அடைய வைத்துள்ளதோடு, எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சசிதரூருக்கு அக்கட்சி தலைவர்கள் சிலர், கண்டனம் மற்றும் விமர்சனம் செய்தாலும் அதனை சசிதரூர் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.
இதனிடையே, 'ஆபரேஷன் சிந்தூர் ' குறித்து வெளிநாடுகளிடம் விவரிக்கும் குழுவில் இடப்பெற்றார். தொடர்ந்து அவர் மத்திய அரசுக்கு ஆதரவாக பேசி வருவதற்கு ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர், சசிதரூரை கண்டித்தனர்.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் நிலாம்பூர் தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளாதது தொடர்பாக சசி தரூர் அளித்தப் பேட்டியில் கூறியதாவது: 'கேரள மாநிலம் நிலம்பூர் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு காங்கிரஸ் என்னை அழைக்கவில்லை. எனக்கும், கட்சி தலைமைக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. அவற்றை மூடிய கதவுக்குள் சரி செய்து கொள்ள முடியும். ஆனால், இதுவரை யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. ' என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அரசு அமைத்த குழுவில் இடம்பெற்றதால், வெளிநாடுகளுக்கு சென்றேன். ஆனால், திரும்பி வந்த பிறகு, பிரசாரத்திற்கு வர வேண்டும் என கட்சியினர் யாரும் என்னை அழைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், கட்சி வேட்பாளருக்கு ஓட்டுப்போட வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்றும் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், காங்கிரசில் உள்ள சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுடனான எனது உறவு வலுவாகவுள்ளது என்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.