தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள கைலாசபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில், காலை உணவு திட்டத்துக்காக சமையல் செய்யும் போது எதிர்பாராத விதமாக சிலிண்டரில் ஏற்பட்ட தீவிபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் போது சமையலறையில் இருந்த பணியாளர் கனகவள்ளி, திடீரென தீப்பிடித்ததை கவனித்து அலறி வெளியே ஓடிவிட்டதையடுத்து, அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
விழிப்புணர்வுடன் செயல்பட்ட ஊழியரின் நடவடிக்கையால் மாணவர்கள் மற்றும் மற்ற ஊழியர்கள் எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் வெளியேற்றப்பட்டனர். பிளாசிகுளம் தீயணைப்பு நிலையம் சார்பில் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த படையினர், தீயை கட்டுப்படுத்தினர்.
ஆனால், தீயால் இரண்டு சிலிண்டர்கள் மற்றும் உணவு பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. சம்பவ இடத்திலிருந்த தற்காலிக சமையலறையும் பகுதிகளும் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மனசாபட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிலிண்டரில் ஏற்பட்ட கியாஸ் கசிவே தீ விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களின் பாதுகாப்பு கருதி, இந்த பள்ளியில் சமையல் வசதிகள் மீண்டும் பரிசீலனை செய்யப்படும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகள் முழுமையாக நடைபெற்று வருவதால், உணவு திட்டத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.