திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர், பத்திரிகையாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்கிய கண்ணதாசனின் பிறந்த நாள் இன்று.
1949ஆம் ஆண்டில் வெளிவந்த கன்னியின் காதலி படத்தில் துவங்கி, 1982ல் வெளிவந்த மூன்றாம் பிறை திரைப்படம் வரை சுமார் 4,500 பாடல்களை எழுதிக் குவித்தவர் கண்ணதாசன்.
சினிமாவுக்காக அவர் எழுதிய பாடல்களில் காலத்தை வென்று இன்றும் நிலைத்து நிற்கும் 16 பாடல்களின் பட்டியலைப் பார்க்கலாம்.
கலங்காதிரு மனமேகண்ணதாசன் எழுதி திரைப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் இது. ஷேக்ஸ்பியரின் Twelfth Night நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு, கே. ராம்நாத் இயக்கத்தில் வெளியான கன்னியின் காதலி (1949) படம்தான் கண்ணதாசன் பாடல்களை எழுதிய முதல் திரைப்படம். இந்தப் படத்துக்கு எஸ்.எம். சுப்பைய்யா நாயுடு, சி.ஆர். சுப்பராமன் ஆகியோர் இசையமைத்தனர்.
பிற்காலத்தில் இருந்ததைப் போல, மெட்டு முதலில் உருவாக்கப்பட்டு பாடல் எழுதப்படவில்லை. முதலில் பாடல் எழுதப்பட்டு, இதற்கென மெட்டமைக்கப்பட்டது. இந்தப் பாடல் பெரிய அளவில் பிரபலமான பாடல் அல்ல. ஆனால், இப்போது கேட்டாலும் உள்ளத்தை மயக்கும் இசையையும் பாடல் வரிகளையும் கொண்டது.
தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்ஏ. பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி கணேசன், சரோஜாதேவி நம்பியார் ஆகியோர் நடித்து வெளியான பாகப்பிரிவினை (1959) படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இசை, விஸ்வநாதன் ராமமூர்த்தி. மாற்றுத்திறனாளியான தான், தன் மனைவிக்கு ஒரு நல்ல கணவனாக இருக்க முடியுமா என்று நினைத்து வருந்தும் கணவனைத் தேற்றும் விதத்தில் மனைவி பாடுவதைப்போல அமைந்த பாடல் இது.
"கால்களில்லாமல் வெண்மதி வானில்/தவழ்ந்து வரவில்லையா?/கால்களில்லாமல் வெண்மதி வானில்/தவழ்ந்து வரவில்லையா? – இரு/ கைகளில்லாமல் மலர்களை/அணைத்து காதல் தரவில்லையா?/காதல் தரவில்லையா?" என்ற வரிகள் பலரது மனதுக்கு நெருக்கமாக அமைந்தன.
அச்சம் என்பது மடமையடாஎம். நடேசன் இயக்கத்தில் எம்.ஜி. ராமச்சந்திரன் - பத்மினி நடித்து வெளியான மன்னாதி மன்னன் (1960) படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இந்தப் படத்தின் கதை, கண்ணதாசன் எழுதிய 'ஆட்டனத்தி ஆதிமந்தி' கதையைத் தழுவி எழுதப்பட்டது. திராவிட நிலப்பரப்பை ஆண்டவர்களின் பெருமையைச் சொல்வதைப் போலவும் திராவிடப் பண்பையும் கூறுவதைப்போல இந்தப் பாடலை உருவாக்கியிருந்தார் கண்ணதாசன்.
இந்தப் படத்தில் ஏகப்பட்ட பாடல்கள். இதே படத்தில் இடம்பெற்றிருந்த "கண்கள் இரண்டும் என்று உன்னை" பாடலும் அந்தக் காலகட்டத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற பாடலாக அமைந்தது.
ஏ. பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி கணேசன் - சாவித்ரி நடித்து வெளியான பாசமலர் (1961) படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் இது. விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்திருந்த இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் கண்ணதாசன் எழுதியிருந்தார்.
அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையிலான உறவைச் சொல்வதைப் போல அமைந்த 'மலர்ந்தும் மலராத' உள்ளத்தை உருக்குவதாக அமைந்திருந்தது. இதே படத்தில் இடம்பெற்ற 'மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்' பாடலும் இதேபோல ஒரு உருக்கமான பாடல்.
நான் பேச நினைப்பதெல்லாம்இதுவும் ஏ. பீம்சிங் இயக்கத்தில் சிவாஜிகணேசனும் சரோஜா தேவியும் நடித்த பாலும் பழமும் (1961) படத்தில் இடம்பெற்ற பாடல் இது. வழக்கம் போலவே இசை விஸ்வநாதன் - ராமமூர்த்தி. இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களையுமே கண்ணதாசனே எழுதியிருந்தார். மனைவி இறந்துவிட்டதாக நினைத்து, வேறொரு பெண்ணைத் திருமணம் செய்கிறான் கணவன். ஆனால், மனைவி இறக்காமல் திரும்பி வருகிறாள்.
இந்தப் படத்தில், முதன் மனைவியுடன் திருமணமானதும் நாயகன் நாயகியிடம் "நீ என்னிடம் எதுவுமே கேட்பதில்லை, ஏதாவது கேள்" என்றவுடன் நாயகி பாடும் பாடல் இது. இதே படத்தில் இடம்பெற்ற 'என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்' என்ற பாடலும் அட்டகாசமாக இருந்தது.
ஸ்ரீதர் இயக்கி வெளிவந்த நெஞ்சில் ஓர் ஆலயம் (1962) திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இந்தப் படத்துக்கு இசையமைத்தவர் எம்.எஸ். விஸ்வநாதன். இந்தப் படத்துக்கான பாடல்களை எழுதித்தர கண்ணதாசன் தொடர்ந்து தாமதம் செய்துவந்த நிலையில், இயக்குநர் ஸ்ரீதர் அவரைப் பற்றி சில கடுமையான வார்த்தைகளைச் சொன்னதாகவும் அதனை எம்.எஸ். விஸ்வநாதன் சொன்னதாக புரிந்துகொண்ட கண்ணதாசன், "சொன்னது நீ தானா..சொல்..சொல்" என்ற பல்லவியுடன் இந்தப் பாடலை உருவாக்கியதாக சில பதிவுகள் இருக்கின்றன.
தன்னுடைய மரணத்துக்குப் பிறகு, தன் மனைவி அவளுடைய முன்னாள் காதலனையே திருமணம் செய்துகொள்ளலாம் எனக் கணவன் கூற, மனைவி அதனை மறுத்துப் பாடுவதுபோல அமைந்த பாடல் இது.
"தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா.. தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா.. ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா.. ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவா" என்ற வரிகள் ஒட்டுமொத்தப் படத்தின் சாரத்தைக் கொண்டிருந்தன. தேவிகா பாடுவதைப் போல அமைந்த இந்தப் பாடலின் காட்சியமைப்பும் அட்டகாசமாக இருந்தது. இதே படத்தில் இடம்பெற்றிருந்த 'எங்கிருந்தாலும் வாழ்க' பாடலும் பிரபலமான ஒன்று.
ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளியான படித்தால் மட்டும் போதுமா (1962) படத்தில் இடம்பெற்ற பாடல் இது. படத்திற்கு இசை விஸ்வநாதன் - ராமமூர்த்தி. இந்தப் படத்தில் தம்பிக்குப் பெண் பார்க்க அண்ணனும் அண்ணனுக்குப் பெண் பார்க்க தம்பியும் செல்கிறார்கள். தாங்கள் பார்த்துவிட்டுவந்த பெண்ணைப் பற்றி இருவரும் பாடும் பாடல் இது.
இந்தப் பாடலில் ஒலிக்கும் இரு குரல்களும் ஆண் குரல்கள். டி.எம். சௌந்தரராஜனும் பி.பி. ஸ்ரீநிவாஸும் இந்தப் பாடலை இணைந்து பாடியிருந்தார்கள். இதே படத்தில் இன்னொரு இனிமையான பாடலும் உண்டு. அது 'தன்னிலவு தேனிறைக்க' என்ற பாடல். அந்தப் பாடலை மாயவநாதன் எழுதியிருந்தார்.
கே. சங்கர் இயக்கத்தில் வெளியான பணத்தோட்டம் (1963) படத்தில் இடம்பெற்ற பாடல் இது. படத்துக்கு இசை விஸ்வநாதன் - ராமமூர்த்தி. மிகவும் இனிமையான இந்த டூயட் பாடலை பி. சுசீலாவும் டி.எம். சௌந்தரராஜனும் பாடியிருந்தார்கள்.
இந்தப் பாடலில் இடம்பெற்றிருந்த "பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா, சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா?" என்ற வரிகளை எம்.ஜி.ஆரோடு பொருத்திப் பார்த்து மகிழ்ந்தார்கள் அவரது ரசிகர்கள்.
தாதா மிராசியின் இயக்கத்தில் கண்ணதாசன் கதையில் உருவான படம் ரத்தத் திலகம் (1963). சிவாஜி கணேசன் நாயகனாக நடித்த இந்தப் படத்திற்கு கே.வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். அதில் ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு பாடலை, கண்ணதாசனே திரையில் பாடுவதைப் போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
"காவியத் தாயின் இளையமகன்/காதல் பெண்களின் பெருந்தலைவன்/மானிட ஜாதியில் தனிமனிதன் நான்/படைப்பதனால் என்பேர் இறைவன்! / மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர்/மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் நான்/நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த/நிலையிலும் எனக்கு மரணமில்லை" என அந்தப் பாடல் வரிகளும் தன்னைக் குறிப்பதைப்போலவே எழுதியிருந்தார் கண்ணதாசன். இதே படத்தில் இடம்பெற்றிருந்த 'பசுமை நிறைந்த நினைவுகளே' பாடலும் காலத்தால் அழியாத பாடலாக அமைந்தது.
பி.ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த 'ஆயிரத்தில் ஒருவன்' (1965) படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இசையமைத்தவர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி. இவர்கள் இருவரும் இணைந்து இசையமைத்த கடைசித் திரைப்படம் இது. அடிமைகள் தங்கள் விடுதலையை எண்ணிப் பாடுவதைப் போல அமைந்த பாடல் இது.
"கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை.. கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை..அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை..அடிமை வாழும் பூமியெங்கும் வேண்டும் விடுதலை" என்ற வரிகள் மனதைக் கவர்வதாக அமைந்தன. இதே படத்தில் கண்ணதாசன் எழுதிய 'ஓடும் மேகங்களே.. ஒரு சொல் கேளீரோ' பாடலும் அட்டகாசமாக அமைந்தது.
ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த வல்லவனுக்கு வல்லவன் (1965) திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. படத்து இசையமைத்திருந்தவர் வேதா. Ustaadon Ke Ustad என்ற இந்திப் படத்தைத் தழுவி உருவாக்கப்பட்ட படம்தான் வல்லவனுக்கு வல்லவன். அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த Sou Baar Janam Lenge என்ற பாடலின் மெட்டிலேயே இந்தப் பாடலும் எழுதப்பட்டது.
"இந்த மானிடக் காதலெல்லாம்.. ஒரு மரணத்தில் மாறி விடும்..அந்த மலர்களின் வாசமெல்லாம்..ஒரு மாலைக்குள் வாடி விடும்.. நம் காதலின் தீபம் மட்டும்..எந்த நாளிலும் கூட வரும்" என்ற வரிகள் பலருக்கு இப்போதும் மனப்பாடம்.
லில்லி மலருக்கு கொண்டாட்டம்எம்.ஜி.ஆர். இயக்கத்தில் வெளியான உலகம் சுற்றும் வாலிபன் (1973) படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இசை எம்.எஸ். விஸ்வநாதன். இந்தப் படத்தில் ஏகப்பட்ட பாடல்கள். பாடல்களை கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், வேதா ஆகியோர் எழுதியிருந்தார்கள்.
"அவள் ஒரு நவரச நாடகம்", "லில்லி மலர்களுக்குக் கொண்டாட்டம்", "பச்சைக் கிளி முத்துச் சரம்", "உலகம்.. உலகம்" ஆகிய பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார். அதில் 'லில்லி மலருக்குக் கொண்டாட்டம்' பாடல் இடம்பெற்றிருந்தது.
மிகவும் உருக்கமான இந்தப் பாடல் வியட்நாம் வீடு (1970) திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தது. பாடலுக்கு இசை கே.வி. மகாதேவன். இந்தப் படத்தில் 'பிரஸ்டீஜ்' பத்மநாப ஐயராக வரும் சிவாஜி கணேசன் தன் குழந்தைகளால் பெரும் பிரச்சனைகளைச் சந்திப்பார். அந்தச் சூழலில் அவர் தன் மனைவியைப் பார்த்துப் பாடுவது போல அமைந்த பாடல் இது.
"ஆலம் விழுதுகள் போல்... உறவு ஆயிரம் வந்தும் என்ன.. வேர் என நீ இருந்தாய்.. அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்" என்ற சரணமும் "பேருக்கு பிள்ளை உண்டு...பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு...என் தேவையை யார் அறிவார் உன்னை போல்..தெய்வம் ஒன்றே அறியும்" என்ற சரணமும் கேட்பவர்களை இப்போதும் உருக வைக்கும். பாடலைப் பாடியிருப்பவர் டி.எம். சௌந்தரராஜன்.
கே. பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் (1975) திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் இந்தப் படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றிருந்தன. நான்கு பாடல்களையுமே கண்ணதாசனே எழுதியிருந்தார்.
அதில், 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்' தனித்து ஒலித்தது. "ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை.. இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை..பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில்..பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்" எனத் தத்துவார்த்தமாக நகரும் இந்தப் பாடலை வாணி ஜெயராம் பாடியிருந்தார். இந்தப் பாடலுக்காக தேசிய விருதும் கிடைத்தது.
பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் வெளிவந்த டிக்..டிக்..டிக்.. (1981) படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இது ஒரு த்ரில்லர் திரைப்படம். இருந்தாலும் பாடல்களும் அட்டகாசமாக அமைந்திருந்தன. மொத்தம் மூன்று பாடல்கள்தான். அதில் 'இது ஒரு நிலாக் காலம்', 'பூ மலர்ந்திட' ஆகிய பாடல்களை வைரமுத்து எழுதியிருந்தார்.
'நேற்று இந்த நேரம் ஆற்றங்கரையோரம்' பாடலை மட்டும் கண்ணதாசன் எழுதியிருந்தார். ஸ்வப்னாவும் கமல்ஹாசனும் நடித்திருந்த இந்தப் பாடலை லதா ரஜினிகாந்த் பாடியிருந்தார். பாடல் மிகப் பெரிய ஹிட்.
இது கண்ணதாசன் எழுதிய கடைசிப் பாடல். மூன்றாம் பிறை (1981) திரைப்படம் என்றாலே நினைவுக்கு வரும் பாடல் இது. ஒரு காட்சியில், பேனா மை பாட்டிலை ஸ்ரீ தேவி உடைத்துவிட, கமல் அவரிடம் கோபித்துக் கொள்வார். அதற்கடுத்த காட்சியில் ஸ்ரீதேவி காணாமல் போய்விட, அவரை எங்கெங்கோ தேடிவிட்டு கமல்ஹாசன் வீடு திரும்பினால், வீட்டில் காத்திருப்பார் அவர். அதற்குப் பிறகு, தனக்குத் தூக்கம் வரவில்லையென ஸ்ரீ தேவி சொல்ல, ஒரு தாலாட்டைப் போல கமல்ஹாசன் பாடுவதாக இந்தக் காட்சி அமைந்திருக்கும்.
பாடல் வரிகள், இசை, பாடலுக்கான காட்சிகள் என எல்லாமே அட்டகாசமாக அமைந்த பாடல் இது. இந்தப் பாடலுக்கு இசை இளையராஜா. இந்தப் பாடல் 1981 செப்டம்பர் மாதம் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. கண்ணதாசன் 1981ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காலமானார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு