நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி நடிகர் கிருஷ்ணாவுக்கு நுங்கம்பாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
போதைப்பொருள் விற்பனை செய்ததாக சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப் குமாரை போலீஸார் கைது செய்த நிலையில், அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்பையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவைச் சேர்ந்த ஜான், அதிமுக முன்னாள் ஐடி விங் நிர்வாகி பிரசாத், நடிகர் ஸ்ரீகாந்த் என அடுத்தடுத்து பலர் சிக்கி வருகின்றனர். நடிகர் ஸ்ரீகாந்திடம் தொடர்ந்து 12 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதும் உறுதியானதை அடுத்து சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி தயாளன் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார். போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த்துக்கு ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி நடிகர் கிருஷ்ணாவுக்கு நுங்கம்பாக்கம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளன. நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.