தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ஜூடி மெட்லா பகுதியில் 10ம் வகுப்பு மாணவி, தனது காதலனுடன் சேர்ந்து தாயை கொலை செய்த பரபரப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த கொடூரம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூடி மெட்லாவில் உள்ள என்எல்பி நகரைச் சேர்ந்த அஞ்சலி என்ற பெண், தெலுங்கானா கலாச்சாரத் துறையில் நாட்டுப்புற பாடகியாக இருந்தார். கணவர் பிரிந்து வாழ்ந்த அவர், தனது இரு மகள்களுடன் வசித்து வந்தார். இவரது 16 வயது மகள், 10ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு, அந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் நல்கொண்டா பகுதியைச் சேர்ந்த 19 வயது டிஜே பிளேயர் சிவாவுடன் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு காதலாக மாறிய நிலையில், தாயார் அஞ்சலி இதை கண்டித்து, படிப்பில் கவனம் செலுத்துமாறு உறுதி கூறியதுடன், சிவாவை சந்திக்க வேண்டாம் எனவே கேட்டிருந்தார்.
அதனை பொருட்படுத்தாமல் சிறுமி, கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துச் சென்றிருந்தார். போலீசார் அவரை மீட்டு அறிவுரை கூறி வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
மேலும், சிவா அந்த சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தாரா என்பது தொடர்பாக மருத்துவ பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டது. இதனை எதிர்த்து, தன் காதலுக்கு தடையாக இருப்பதாக நினைத்த சிறுமி, தனது காதலன் சிவாவிடம் தாயை கொல்வதற்குத் திட்டம் கூறியுள்ளார்.
அதன்படி, சிவா, அவரது தம்பி எஸ்வந்த் மற்றும் சிறுமி ஆகிய மூவரும் முதலில் துப்பட்டாவால் அஞ்சலியின் கழுத்தை நெறித்தனர். மயக்கம் வந்தபின், மசாலா அரைக்கும் உரலால் தலையில் அடித்து கொடூரமாக கொலை செய்தனர். சத்தம் கேட்ட அஞ்சலியின் இளைய மகள் வெளியில் வந்ததும், “எதுவும் இல்லை” என கூறி அவரையும் அறைக்குள் தள்ளி பூட்டி வைத்தனர். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
ஜூடி மெட்லா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 10ம் வகுப்பு படிக்கும் மாணவி, தனது காதலை எதிர்த்த தாயை காதலனுடன் சேர்ந்து கொன்ற சம்பவம், தெலுங்கானா மாநிலத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.