(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)
மேனாள் ஆசிரியர் , பிபிசி உலகசேவைகட்டுரையாளர்: மணிவண்ணன் திருமலைஈரான் பற்றிய இந்தக் கட்டுரைத் தொடரின் ஆரம்பத்தில், ``அமெரிக்கா போரில் எப்போது ஈடுபடும்?” என்று கேட்ட கேள்விக்கு தொடரின் மூன்றாவது பகுதி நேற்று வெளியாவதற்கு முன்பே பதில் வந்துவிட்டது.
அமெரிக்காவின் பி-2 ரக விமானங்கள் பல ஈரானின் அணு உலைத் தளங்களான, ஃபோர்டோ, நடான்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் ஆகியவற்றின் மீது பெரும் குண்டுத் தாக்குதலை நடத்தியதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.
ஈரானின் அணு சக்தித் திறன் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது என்றும் அவர் கூறிக்கொண்டார்.
ஈரானின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை, எதிர்பார்த்தது போலவே இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொண்டாடியிருக்கிறார்.
இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி தருவோம் என்று கூறிய ஈரான், திங்கட்கிழமை மாலை கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப் படை தளத்தின் மீது ஏவுகணைகளை வீசியிருக்கிறது.
அமெரிக்கத் தளங்கள் மீது நடத்தப்படும் எந்தத் தாக்குதலும் ஈரானுக்கு மேலும் பேரழிவைத் தரும் என்ற ரீதியில் ஏற்கனவே ட்ரம்ப் எச்சரித்திருக்கிறார்.
ஈரான் நடத்திய இந்த ஏவுகணைத் தாக்குதலில் எந்த பெரிய சேதமும் ஏற்படவில்லை என்று தெரிகிறது. அனைத்து ஏவுகணைகளும் இடை மறிக்கப்பட்டு முறியடிக்கப்பட்டுவிட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
முன் கூட்டியே தாக்குதல் நடத்தப் போவது பற்றி கத்தாருக்குத் ஈரான் தெரியப்படுத்தியிருந்தது என்றும், எனவே ஈரானின் இந்த பதிலடி ஒரு குறியீட்டளவிலான தாக்குதல்தான் என்று பல ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
ஆனால் அமெரிக்கா இதற்கும் பதில் தாக்குதல் நடத்துமா அல்லது சேதம் ஏதும் விளைவிக்காத விஷயம் என்பதால் இத்தோடு விடுமா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.
இதற்கிடையே இஸ்ரேல் - ஈரான் பரஸ்பரத் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.
ஏன் இந்த எதிர்ப்பு?ஈரானின் அணுசக்தித் திட்டம்ஈரானின் அணுசக்தி வல்லமை பற்றிய இஸ்ரேல் - அமெரிக்காவின் இந்த அச்சங்களுக்கும், தனது அணுசக்தி திட்டங்கள் பற்றிய ஈரானின் பிடிவாதத்துக்கும் என்ன காரணம் ?
ஈரானைப் பொறுத்தவரை அதன் அணு சக்தித் திட்டத்தின் வளர்ச்சியை, தனது தேசிய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் ஒரு உத்தரவாதமாகப் பார்க்கிறது.
ஈரானின் அணுசக்தித் திட்டம் 1950-களிலேயே மன்னர் ரேஸா பெஹ்லவியின் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம்.
அமெரிக்க உதவியுடன் தொடங்கப்பட்ட இந்த திட்டம் , சிவில் அணு சக்தித் திட்டம்தான் . ஆனால் பின்னர் மன்னர் பெஹ்லவியின் ஆட்சியின் இறுதி ஆண்டுகளிலேயே கூட அவருக்கே இதை அணு ஆயுதத் தயாரிப்புக்குமான திட்டமாக மாற்றும் யோசனை உதிக்க ஆரம்பித்திருந்தது.
மன்னர் பெஹ்லவி , 1979 இஸ்லாமியப் புரட்சியை அடுத்து, நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், புதிதாக வந்த இஸ்லாமிய அரசின் தலைவர் அயோதுல்லா கோமெனி அணு சக்தித் திட்டத்தை மேற்குலகின் நாசகார சக்தியாகவே கருதி, ஈரானின் இளம் அணு சக்தித் திட்டத்தை இடை நிறுத்தினார்.
பின்னர் ஈரான் மீது அமெரிக்கா ஆதரவுடன் ஈராக் நடத்திய போரை அடுத்து , ஈரான் தனிமைப் படுத்தப்பட்டதாக உணரத் தொடங்கிய நிலையில், நிறுத்தப்பட்ட அணு சக்தித் திட்டத்துக்கு மீண்டும் உயிர்ப்பூட்டப்பட்டது.
ஆனால், அமெரிக்காவோ பிற மேற்குலக நாடுகளோ ஈரானின் இந்தத் திட்டம் குறித்து முதலில் பெரிதும் சந்தேகம் கொள்ளவில்லை.
ஈரானும் தனது அணு சக்தித் திட்டத்தினை யுரேனியச் செறிவூட்டல் என்ற நிலைக்குக் கொண்டு போக ஆரம்பித்தது. பொதுவாக யுரேனியச் செறிவூட்டல் , சிவில் அணு மின் சக்திக்கும் அவசியம். ஆனால் சிவில் திட்டங்களுக்கு யுரேனியம் 3.67% அளவுக்கு செறிவூட்டப்பட்டால் போதும்.
அதற்கு மேலும் கூட இரண்டு நிலைகள் உண்டு. யுரேனியத்தை 20% செறிவூட்டினால் அதை அணு ஆராய்ச்சி வேலைகளுக்குப் பயன்படுத்தலாம்.
அதைத் தாண்டி 90% வரை செறிவூட்டினால்தான் , அணு குண்டு தயாரிக்க அதைப் பயன்படுத்த முடியும்.
ஈரானின் இந்த விஸ்தரிக்கப்பட்ட திட்டம் 1990களின் இறுதிவரையில் கூட ஆயுதத் தயாரிப்புக்க்கு தேவையான அளவை எட்டவில்லை.
ஆனால் அந்த நிலையில் ஈரானிய அரசின் (பாரீசிலிருந்து இயங்கிய) எதிர்க் கட்சிக் குழு ஒன்று கசியவிட்ட தகவலை அடுத்து ஈரானின் அணு சக்தித் திட்டம் கண்ட முன்னேற்றம் வெளியே வந்து அமெரிக்காவையும், இஸ்ரேலையும் அச்சம் கொள்ளச் செய்தது
இஸ்ரேலின் தொடர் வற்புறுத்தலால், அமெரிக்க அதிபர்கள் ஜார்ஜ் புஷ், ஒபாமா ஆகியோரும் ஈரான் தனது அணு சக்தித் திட்டத்தைக் கைவிடவேண்டும், அது அணு ஆயுத வல்லமை பெறக்கூடாது என்ற கொள்கையை எடுத்தனர்.
இதற்கான தொடர் பேச்சுவார்த்தைகள் மற்றும் அழுத்தங்களை அடுத்து 2015-ம் ஆண்டு ஒபாமாவின் இரண்டாவது பதவிக்காலத்தில் , அமெரிக்கா மற்றும் பிற 4 வல்லரசுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் ஈரானை அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட வைத்தன.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதில்லை என்று ஒப்புக்கொண்டது. தனது அணு உலைகள் அனைத்தையும் சர்வதேச எரிசக்தி நிறுவனத்தின் ( IAEA) கண்காணிப்பாளர்களின் பரிசோதனைக்கு அனுமதிக்கவும் ஈரான் ஒப்புக்கொண்டது.
யுரேனியச் செறிவூட்டலை சிவில் அணு சக்தி உற்பத்திக்குத் தேவையான 3.67% அளவில் மட்டும் நிறுத்திக் கொள்ளவும் ஈரான் சம்மதித்தது.
இதற்கு மாற்றீடாக, ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் விலக்கிக் கொள்ளப்பட அமெரிக்காவும் மற்ற நாடுகளும் ஒப்புக்கொண்டன.
`ஈரானும் இஸ்ரேலும் எப்படியான நண்பர்கள் தெரியுமா?’ - நட்பு, பகையான பின்னணி | களம் 2: Iran vs Israel ஒப்பந்தத்தை எதிர்த்த இஸ்ரேல்ஆனால் இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ரசிக்கவில்லை. ஈரான் இந்த ஒப்பந்தத்தை மீறி, ரகசியமாக அணு ஆயுத வல்லமை பெற்று தனக்குப் போட்டியாக, அச்சுறுத்தலாக உருவெடுக்கும் என்று அது நம்பியது.
அதே போல, வளைகுடா நாடுகளான சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள் போன்றவையும் இந்த ஒப்பந்தத்தை வரவேற்கவில்லை. அந்நாடுகளும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈரானின் அணு சக்தித் திட்டம் கட்டுப்பாடுகளுடன் தொடர்வதை விரும்பவில்லை.
இந்த நிலையில், 2016 அமெரிக்கத் தேர்தலில் ட்ரம்ப் வென்று இரண்டாண்டுகளில் அவரை தனது நிலைப்பாட்டுக் கொண்டு வருவதில் இஸ்ரேல் வெற்றி கண்டது.
ஒபாமா முன்முயற்சியில் கொண்டுவரப்பட்ட ஈரான் ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்த ட்ரம்ப் , அமெரிக்காவை இந்த ஒப்பந்தத்திலிருந்து 2018ம் ஆண்டு ஒரு தலைபட்சமாக விலக்கிக்கொண்டார்.
ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை ட்ரம்ப் விதிக்க, ஈரானும், ஒப்பந்தம் இனி தன்னைக் கட்டுப்படுத்தாது என்று அறிவித்து, அணு சக்தித் திட்டத்தை விஸ்தரிக்கத் தொடங்கியது.
யுரேனியச் செறிவூட்டல்கள் தொடர்ந்து , தற்போது ஈரான் 60% யுரேனியச் செறிவூட்டல் என்ற நிலையை எட்டிவிட்டதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையிலிருந்து ஆயுத உற்பத்திக்குத் தேவைப்படும் 90% செறிவூட்டல் என்பதை எட்டுவது இனி எளிது என்ற நிலையில், இஸ்ரேல் ஈரானின் அணு சக்தித் திட்டங்களை முடமாக்க அல்லது அழிக்க நேரம் பார்த்திருந்தது.
2023ல் இஸ்ரேலின்மீது ஹமாஸ் தாக்குதல் ஈரானின் மீது இஸ்ரேலுக்கு கோபத்தை அதிகப்படுத்தியது.
இந்த நிலையில்தான் ட்ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்தது இஸ்ரேலின் ஈரான் பற்றிய கணக்குகளை எளிதாக்கியது. ட்ரம்ப் ஆட்சிக்கு வரும் முன்னர் உலகின் தொலை தூரப் போர்களில் அமெரிக்காவின் தலையீடு இனி இருக்காது, அமெரிக்க உயிர்கள் வெளிநாட்டுப் போர்களில் பலியாகக்கூடாது என்ற கொள்கையை கொண்டிருந்த ட்ரம்ப் , ஈரானுடன் அதன் அணு சக்தித் திட்டம் பற்றிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முன்வந்தார். (ஈரான் அணுத்தடை ஒப்பந்தத்திலிருந்து முன்னர் ஒரு தலைப் பட்சமாக அமெரிக்காவை விலக்கிக்கொண்ட அதே ட்ரம்ப்தான்!) .
அந்த பேச்சுவார்த்தைகள் ட்ரம்ப் விதித்த 60 நாட்கள் காலக் கெடுவைத் தாண்டி மேலும் ஒரு சுற்று பேச்சுவார்த்தைக்கு திட்டமிடப்பட்ட போதுதான் இஸ்ரேலின் ஈரான் மீதான கடந்த ஜுன் 13ம் தேதி தாக்குதல் வந்து, ஈரானை அப்பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகிக்கொள்ளச் செய்து, இப்போது மத்தியக் கிழக்கு முழுவதும் பதற்றத்தின் உச்சியில் கொண்டுபோய் விட்டிருக்கிறது.
இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு ஈரான் மீதான் அமெரிக்கத் தாக்குதல் பற்றி மகிழ்ச்சி அடைந்தாலும், அமெரிக்கத் தாக்குதல்களால் கூட ஈரானின் ஃபோர்தோ தளம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதா என்பது குறித்த சந்தேகங்கள் நிலவுவது பற்றி அதிருப்தி அடைந்திருப்பார்.
ஃபோர்தோ பகுதியில் மலைக்குக் கீழ் சுமார் அரை மைலுக்கும் மேலான ஆழத்தில் ஈரான் கட்டியிருந்த அணு சக்தி மையம், அமெரிக்கா நடத்தியிருப்பதைப் போன்ற வான் தாக்குதல்களை எதிர்பார்த்தே மிகுந்த பலமான கட்டுமானமாக கட்டப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் பாதாள சுரங்கங்களை உடைக்கும் சக்தி வாய்ந்த ( Massive Ordnance Penetrator) குண்டுகள் இந்த போர்தோ மீதும் , நடான்ஸ் அணு சக்தி திட்டம் இருக்கும் இடத்தின்மீதும் வீசப்பட்டிருக்கின்றன.
ஆனால் இந்த தாக்குதலில் கூட ஃபோர்தோ அணுசக்தி நிலையம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதா என்பது குறித்து பக்கச்சார்பற்ற எந்தத் தகவலும் இல்லை.
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் ஏன்? அமெரிக்கா தலையிடுமா? - முழுமையான அலசல்! | களம்: Iran vs Israelஈரான் இந்தத் தாக்குதலை எதிர்பார்த்து முன்னரேயே அந்த இடத்திலிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியக்கையிருப்பை வேறொரு ரகசிய இடத்திற்கு நகர்த்தியிருக்கலாம் என்ற யூகங்களும் நிலவுகின்றன.
ஈரான் இந்த தாக்குதல்களை அடுத்து, அதன் தற்காப்புக்கு ஒரே வழி அணு வல்லமையைப் பெறுவதுதான் என்ற தன் நிலைப்பாடு சரியானது என்ற முடிவுக்கு வரும், எனவே இந்த தாக்குதல்கள் அதன் நோக்கங்களை எட்டுவதில் தோல்வியைத்தான் பெறும் என்று கருத்தும் நிலவுகிறது.
இந்தத் தாக்குதலிருந்து தப்ப சரணாகதி என்ற நிலைக்கு ஈரான் வந்தாலும் , ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், எதிர்காலத்தில் ஈரானில் ஆட்சிக்கு வரும் எந்த அரசும் முழுமையாக தனது அணு சக்திக் கொள்கையை மாற்றிக்கொண்டு , அணு ஆயுத வல்லமை பெறுவதைக் கைவிடுமா என்பது பெரிய கேள்விக்குறி.
இதில் ஒரு நகை முரண் என்னவென்றால், அணு ஆயுதப் பரவலை எதிர்க்கும் அமெரிக்கா, அதன் கூட்டாளி நாடான இஸ்ரேல் ஒரு அறிவிக்கப்படாத அணு வல்லமை பெற்ற நாடாக இருக்க அனுமதித்திருப்பதுதான்.
இஸ்ரேலின் அணு ஆயுதத்திட்டமும் ஈரானின் அணு சக்தித் திட்டமும் ஏறக்குறைய ஒரே காலத்தவை, ஒரே மாதிரியான தொடக்கங்கள் கொண்டவை. இஸ்ரேலின் முதல் பிரதமர் பென் குரியன் காலத்திலேயே இஸ்ரேலின் அணு சக்தித் திட்டம் ரகசியமாக தொடங்கப்பட்டு பிரான்ஸ் நாட்டின் ஒத்துழைப்புடன் முன்னேற்றம் கண்டது.
ஈரானைப் போல இஸ்ரேல் அணு ஆயுதப் பரவல் தடை ( Nuclear Non Proliferation Treaty) ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடவில்லை.
இஸ்ரேலிடம் இப்போது குறைந்தது 90 அணு ஆயுதங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.
வட கொரியா போல ரகசியமாக அணு ஆயுதம் பெறுவதில் ஈரான் வெற்றி பெற்றிருக்குமானால் அதன் இந்தத் தாக்குதலை நடத்த அமெரிக்கா துணிந்திருக்குமா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.!
(தொடரும்..!)
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY