சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுக கூட்டணியை பாஜக தான் வழி நடத்துகிறது. அதிமுக அமைதியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜக நிலை கொள்வதை எப்படி அனுமதிக்க முடியும். இங்கு சமூக நீதிக்கான குரல் கடந்த அரை நூற்றாண்டுகளாக வலுவாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.
எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் வந்த திராவிட கட்சியில் இருந்து சென்றவர் தான் பாஜகவின் தலைவர் நயினார் நாகேந்திரன். தெரிந்து தான் அவரை தலைவர் ஆக்கியுள்ளனர். அதிமுகவை விழுங்குவது தான் பாஜகவின் திட்டம்.
இதை எப்போது அதிமுக உணரப்போகிறது. இப்போதும் 65 எம்எல்ஏக்களை கொண்டுள்ளது. முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியாரையும், அண்ணாவையும் குறித்து அவதூறாக வீடியோவை வெளியிட்ட பாஜக சங்பரிவார் அமைப்புகளோடு அதிமுக பயணிப்பது தற்கொலைக்கு சமம். பாமக திமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நீங்கள் தான் கூறுகிறீர்கள்.
அது ஒரு யூகம். அது நடந்தால் பார்க்கலாம். திமுக கூட்டணியில் கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலில் பாமகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இருந்திருத்திருக்கிறது. அதன் பிறகு பாமகவின் நடவடிக்கையால் தான் நாங்கள் பல அவதூறுகளுக்கு ஆளாக வேண்டிய நிலை இருந்தது என்று கூறினார்.