2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் புதுச்சேரி பா.ஜ.க.,வில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கட்சி மேலிடம் செய்து வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி பா.ஜ.க தலைவரை மாற்றிவிட்டு புதிய தலைவரை நியமிப்பது, தேர்தல் நேரத்தில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கி கௌரவிப்பது என பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.
இந்த நிலையில் புதுச்சேரிக்கு வருகை புரிந்த மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, கட்சி அலுவலகத்தில் பா.ஜ.க தலைவர் செல்வகணபதி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மற்றும் நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் வி.பி. ராமலிங்கம், அசோக் பாபு, மற்றும் வெங்கடேசன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
நீண்ட நேர ஆலோசனைக்கு பிறகு நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று பேரும் சபாநாயகர் செல்வத்தை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதத்தை அளித்தனர்.
இந்த நிலையில்,புதுச்சேரியில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் சாய் சரவணகுமார் ராஜினாமா செய்துள்ளார். பாஜகவை சேர்ந்த அவர் தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் ரங்கசாமியிடம் வழங்கியுள்ளார்.
தலைமை கூறியதால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக சாய் சரவணகுமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.