பெங்களூரு நகரில் இயங்கி வரும் 3.6 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்களுக்கு, கடந்த 2021ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ள கட்டணத் திட்டம் மாற்றப்பட உள்ளது. இதுவரை, முதல் 2 கிலோ மீட்டருக்கு ரூ.30 என்றும், அதாவது கிலோமீட்டருக்கு ரூ.15 என நிர்ணயிக்கப்பட்ட கட்டணம்தான் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டண உயர்வு அமல்படுத்தப்படாததை தொடர்ந்து, ஆட்டோ டிரைவர்கள் தொடர்ச்சியாக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், அரசு புதிய கட்டண நிர்ணயத்தை அறிவித்துள்ளது. அதன்படி, குறைந்தபட்ச கட்டணம் ரூ.30-ல் இருந்து ரூ.36 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் கட்டணம் ரூ.15-ல் இருந்து ரூ.18 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது சுமார் 20 சதவீதம் வரை அதிகரிப்பு என கூறப்படுகிறது. இந்த புதிய கட்டணம் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த கட்டண உயர்வு ஆட்டோ டிரைவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. அவர்களது பிரதான கோரிக்கை – குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.40 ஆக உயர்த்த வேண்டும், ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.20 என நிர்ணயிக்க வேண்டும் – என்பது நிறைவேறவில்லை என தெரிவிக்கின்றனர். இதனால், திருப்தி இல்லாத டிரைவர்கள் சங்கங்கள் நாளை போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும், அரசு கோரிக்கையை ஏற்கும் வரை மீட்டர் பயன்படுத்தாமல் ஆட்டோ இயக்கும் எச்சரிக்கையும் அவர்கள் விடுத்துள்ளனர்.