தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கடந்த 13-ந் தேதி திருச்சியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய நிலையில், இன்று இரண்டாவது கட்டமாக நாகப்பட்டினம், திருவாரூரில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
மதியம் நாகப்பட்டினத்தில் பிரசாரம் மேற்கொள்ளும்போது, தான் எதற்காக சனிக்கிழமைகளில் மட்டும் பிரசாரம் செய்கிறேன் என்பதற்கு பதில் அளித்தார். அதாவது, "மக்களை சந்திக்கும் பயணத்திட்டம் போடும்போது அது என்ன சனிக்கிழமை பயணம் என்ற விமர்சனம் வந்தது.
உங்களை சந்திக்க வரும்போது உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது என்ற ஒரே காரணத்தினால் தான் வார இறுதி நாளா பார்த்து மக்கள் பயணத்தை திட்டமிட்டுள்ளோம். அரசியலில் சில பேருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் அல்லவா அதனால் தான் ஓய்வு நாளாக பார்த்து தேர்ந்தெடுத்தோம்." என்று தெரிவித்தார்.
இதையடுத்து நாகப்பட்டினத்தில் சற்று நேரத்தில், அவசர அவசரமாக போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டது. அதில், "மீனவர் 7 நாள் வேலை பார்க்கிறார். ஆனால், இங்கே ஒருத்தர் மட்டும் 1 நாள்தான் வேலை பண்றாரு. அதுவும் சனிக்கிழமை மட்டும். சிறப்பு" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தி.மு.க.வினரால் ஒட்டப்பட்டதாக கருதப்படும் இந்த போஸ்டர், விஜய் கட்சி தொண்டர்களை கோபமடையச் செய்துள்ளது. இதனால், நாகப்பட்டினத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.