திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் தாலுகா புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்முடியனூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர் வாரிசு சான்றிதழ் கேட்டு அதே ஊர் கிராம நிர்வாக அலுவலர் குணாநிதியிடம் விண்ணப்பித்துள்ளார்.
ஆனால், கிராம நிர்வாக அலுவலர் குணாநிதி வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டுமென்றால் ரூ.2 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று பிரவீனிடம் கூறியுள்ளார்.ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரவீன் சம்பவம் குறித்து திருவண்ணாமலையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் அளித்தார்.
அதன் படி லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை பிரவீன்குமாரிடம் வழங்கி அதனை மேல்முடியனூர் கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவித்தனர். அதன் படி பிரவீன் விஏஓவிடம் பணத்தை கொடுத்த போது அங்கு மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், குணாநிதி மற்றும் உடனிருந்த உதவியாளர் ஏழுமலையை கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.