ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் உள்ள காசிபுக்கா வெங்கடேஸ்வரா சுவாமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 9 பக்தர்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏகாதசி பண்டிகையை முன்னிட்டு கோவிலில் ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் குவிந்த நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்; மேலும் சிலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது ‘எக்ஸ்’ தளப் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார். “தெய்வத்தைத் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் இவ்வாறு உயிரிழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்குச் சிறந்த சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.