வங்கிகள் தங்க நகைகள் மற்றும் தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் வழங்கி வந்தன. ஆனால் இப்போது வெள்ளிக்கும் கடன் வழங்கும் வசதியை ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ளது.இந்த புதிய விதிமுறைகள் 2026ஆம் ஆண்டின் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகின்றன.
இந்த புதிய திட்டத்தின் கீழ் வணிக வங்கிகள், சிறு நிதி வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வங்கியல்லா நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் ஆகியவை தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், வெள்ளி நாணயங்களை அடமானம் வைத்து கடன் வழங்க முடியும்.
இந்த புதிய விதிமுறைகளின்படி, தங்கம் அல்லது வெள்ளி கட்டிகள் (bullion) மீது கடன் பெற முடியாது. அதேபோல, தங்கம் அல்லது வெள்ளி தொடர்பான முதலீடுகளான ETFகள் அல்லது பரஸ்பர நிதிகள் மீதும் கடன் பெற முடியாது. இந்த விதிமுறையின்படி, தங்க நகைகளுக்கு அதிகபட்சமாக 1 கிலோ வரை கடன் பெறலாம். வெள்ளி நகைகளுக்கு அதிகபட்சமாக 10 கிலோ வரை கடன் பெறலாம். தங்க நாணயங்களுக்கு 50 கிராம் வரை கடன் பெறலாம். வெள்ளி நாணயங்களுக்கு 500 கிராம் வரை கடன் பெறலாம்.
ரூ. 2.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு 85% வரை கடன் தொகை கிடைக்கும்.
ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரையிலான கடன்களுக்கு 80% வரை கடன் தொகை கிடைக்கும்.
ரூ. 5 லட்சத்திற்கு மேல் உள்ள கடன்களுக்கு 75% வரை கடன் தொகை வழங்கப்படும்.
கடன் முழுமையாக திருப்பிச் செலுத்தப்பட்ட பிறகு, வங்கி அல்லது நிதி நிறுவனம் 7 வேலை நாட்களுக்குள் நகைகளை அல்லது வெள்ளியை கடன் வாங்கியவருக்கு திருப்பித் தர வேண்டும். தாமதம் ஏற்பட்டால், வங்கி ஒரு நாளைக்கு ரூ. 5,000 இழப்பீடு வழங்க வேண்டும். ஒருவேளை கடன் வாங்கியவர் கடனை திருப்பிச் செலுத்தத் தவறினால், வங்கி அல்லது வங்கியல்லா நிதி நிறுவனம் அந்த வெள்ளி அல்லது தங்கத்தை ஏலம் விடலாம். ஆனால், அவ்வாறு ஏலம் விடுவதற்கு முன்பு கடன் வாங்கியவருக்கு வங்கி அறிவிப்பு கொடுக்க வேண்டும்.
இந்த புதிய விதிமுறைகள் மக்களுக்கு ஒரு நல்ல செய்தியாகும். திடீரென பணம் தேவைப்படும்போது, தங்கத்தைப் போலவே வெள்ளியையும் அடமானம் வைத்து கடன் பெறும் வசதி கிடைத்துள்ளது. இது பலருக்கு நிதி நெருக்கடியைச் சமாளிக்க உதவும். குறிப்பாக, சிறு வணிகர்கள் மற்றும் தனிநபர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.