துருக்கி நாட்டின் மனிசா நகரில் உள்ள ஒரு பள்ளியில், பள்ளி முதல்வர் ஒருவர் ஆட்டிசம் குறைபாடுள்ள 13 வயது மாணவரைப் படிக்கட்டுகளில் இருந்து தள்ளிவிட்ட சம்பவம், நாடெங்கிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடூரமான செயல் சிசிடிவி காணொளியில் பதிவாகி, சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்தக் காணொளியைக் கண்ட ஆயிரக்கணக்கான இணையவாசிகள் கோபத்தையும், நம்பிக்கையின்மையையும் வெளிப்படுத்தி வருகின்றனர். “இப்படிப்பட்டவர் எப்படி ஒரு பள்ளியில் பொறுப்பான பதவியில் இருக்க முடியும்?” என்றும், “மறைமுகமாக இன்னும் என்னவெல்லாம் நடந்திருக்குமோ?” என்றும் பலரும் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
View this post on Instagram
A post shared by Al Jazeera English (@aljazeeraenglish)
இந்த சம்பவம் குறித்து வெளியான ஊடகச் செய்திகளின்படி, குற்றம் சாட்டப்பட்ட பள்ளி முதல்வர் உடனடியாகப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, பின்னர் காவலில் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, “தான் அப்படிச் செய்ய வேண்டும் என்று கருதவில்லை” என்று அந்த முதல்வர் நீதிபதியிடம் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கி நீதித்துறை அமைச்சர் யில்மாஸ் துன்ச் இந்தச் செயலைக் கண்டித்துள்ளார்.
“சமூகத்தில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் எந்தக் குற்றமும் தண்டிக்கப்படாமல் போகாது” என்று அவர் அல் ஜசீரா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து நீதி அமைச்சகமும் உள்ளூர் அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், துருக்கிப் பள்ளிகளில் சிறப்புத் தேவையுள்ள குழந்தைகளுக்கு வலுவான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.