மாடியில் இருந்து விமானங்களை புகைப்படம் எடுத்த 19 வயது இந்திய இளைஞர் மரணம்.. துபாயில் சோகம்..!
WEBDUNIA TAMIL November 15, 2025 03:48 AM

துபாயில் உறவினர்களை பார்க்க சென்றிருந்த 19 வயதான கேரள இளைஞர் ஒருவர், கட்டடத்தின் மாடியில் இருந்து தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

விமானங்களை புகைப்படம் எடுப்பதற்காக மாடிக்கு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த இளைஞர் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த முகமது மிஷால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நவம்பர் 7 ஆம் தேதி டேரா பகுதியில் உள்ள ஒரு பல மாடி கட்டடத்தில் மிஷால், விமானங்களின் காட்சிகளை புகைப்படம் எடுப்பதற்காக கட்டடத்தின் மாடிக்கு சென்றபோது எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார் என்று கூறப்படுகிறது.

கீழே விழுந்த மிஷால் உடனடியாக ரஷீத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு பலத்த உள் காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும், மருத்துவமனையை அடைந்த சிறிது நேரத்திலேயே அவர் உயிர் இழந்ததாகவும் கூறப்படுகிறது.

மிஷால் புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கோழிக்கோட்டில் சிவில் இன்ஜினியரிங் படிப்பில் டிப்ளமோ படித்து வந்தார். அவர் தமது பெற்றோருக்கு ஒரே மகனாவார். அவருக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர்.

Edited by Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.