குஜராத்தின் சூரத் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் நேரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, முஸ்லிம் லீக், மாவோயிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகளை நாடு நிராகரித்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பீஹாரில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. குஜராத்தில் குறிப்பாக சூரத்தில் வசிக்கும் பீஹார் சகோதரர்கள், இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க உரிமை உண்டு என்று பேசியுள்ளார். மேலும், குஜராத் மக்கள் என்னை முதல்வராக தேர்ந்தெடுத்த போது, இந்தியாவின் வளர்ச்சிக்காக குஜராத்தின் வளர்ச்சியை நாங்கள் முன்னிருத்தினோம் என்பது உங்களுக்குத் தெரியும். பீஹார் மக்களும் இதை அறிவார்கள். எங்கள் அடிப்படை சிந்தனை தேசம் முதலில் என்பதுதான் என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.

பீஹார் தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் தோல்வி அடைந்த மகா கூட்டணிக்கும் இடையே 10% வாக்கு வித்தியாசம் உள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்று சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது, இதன் பொருள், பொதுவான வாக்காளர்கள் ஒருமனதாக வாக்களித்துள்ளனர் என்றும், பீஹாரின் வளர்ச்சிக்கான அவர்களின் ஆர்வத்தை இது பிரதிபலிக்கிறதாகவும், புதிய உயரங்களை அடைவதற்கான விருப்பத்தை பீஹார் தற்போது வெளிப்படுத்துகிறது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பீஹார் தேர்தலில் பெண்களும் இளைஞர்களும் ஒரு சக்திவாய்ந்த கூட்டணியை உருவாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். இது வரவிருக்கும் பல பத்தாண்டுகளுக்கு பீஹார் அரசியலின் அடித்தளத்தை வலுப்படுத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜாமீனில் வெளியே இருக்கும் தலைவர்கள், பீஹாரில் சாதி வெறியைத் தூண்ட பிரச்சாரம் செய்தார்கள் என்றும், சாதிவெறியின் விஷத்தை முடிந்த மட்டும் பரப்ப அவர்கள் முயன்றார்கள். ஆனால், பீஹார் மக்கள் சாதிவெறியின் விஷத்தை முற்றிலுமாக நிராகரித்துவிட்டார்கள் என்று மோடி பேசியுள்ளார்.

பீஹார் பொது நிலங்கள் பெரும்பாலும் வக்பு சொத்துக்களாக மாற்றப்பட்டன. தமிழ்நாட்டிலும் இதேபோன்ற சூழ்நிலை இருப்பதை நாங்கள் கண்டோம். அங்கு பல நூற்றாண்டுகள் பழமையான கோயில்களும் கிராமங்களும்கூட வக்பு சொத்துக்களாக அறிவிக்கப்பட்டன. அதற்காகத்தான் நாங்கள் வக்பு சட்டத்தில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தாதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன், இத்தகைய வகுப்புவாத விஷத்தை முற்றிலுமாக நிராகரித்து பீஹார் மக்கள் வளர்ச்சிப் பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர் என்றும் பிரதம குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முஸ்லிம் லீக், மாவோயிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை இந்த நாடு நிராகரித்துவிட்டதாகவும், காங்கிரஸ் கட்சியை இப்போது யாராலும் காப்பாற்ற முடியாது என்றும் தெரிவித்துள்ளார். பழங்குடியினர் நலனுக்கு பாஜக எப்போதுமே உயர் முன்னுரிமையை கொடுத்து வருகிறதாகவும், பழங்குடி சமூகங்கள் எதிர்கொள்ளும் அநீதிக்கு முடிவு கட்டுவதற்கும் வளர்ச்சியின் பலன்கள் அவர்களைச் சென்றடைவதை உறுதி செய்வதற்கும் பாஜக உறுதிபூண்டுள்ளது என்றும் குஜராத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.