இந்தியர்களின் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகத் திருவிழாக் காலங்களில் பெரும்பாலும் நிகழ்ச்சிச் சந்தைகள் ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். இங்கு மக்கள் தங்கள் மகிழ்ச்சிக்காகக் கூடுகின்றனர். இச்சந்தைகளில் ராட்சத சுழல் ஊசல்கள் போன்ற பல சுவாரசியமான, உற்சாகமான விளையாட்டுகளைக் காணலாம்.
எனினும், இவை அனைத்திலும் ‘மரணக் கிணறு’ சாகச நிகழ்ச்சியில், சுவரின் மீது கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சுழன்று ஓட்டுபவர்களின் சாகசங்களைப் பார்ப்பது மிகவே பரபரப்பான அனுபவத்தைத் தரும். மரணக் கிணறு என்பது மரத்தால் செய்யப்பட்ட பெரிய வட்ட வடிவ அமைப்பு. அதன் சுவர்களில் கார் அல்லது மோட்டார் சைக்கிள்கள் அதிவேகமாகச் சுற்றி வருவதே இதன் சிறப்பம்சம்.
View this post on Instagram
A post shared by Jeherul Islam (@jeh__rul)
இந்த சாகசங்களைக் காணும் மக்களின் மூச்சு நின்றுபோகும் அளவுக்கு அந்த வித்தைகள் இருக்கும். சாகசக்காரர்களைப் பார்த்து மக்கள் கைதட்டி உற்சாகப்படுத்துவார்கள். ஆனால், இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் எப்போதாவது ஒரு சிறு தவறு நிகழ்ந்தாலும், அது உயிருக்கே ஆபத்தாக மாறிவிடுகிறது.
அண்மையில் ஒரு திருவிழாவில் அப்படிப்பட்ட ஒரு பயங்கரமான விபத்து நிகழ்ந்தது. அதன் காணொலி சமூக ஊடகங்களில் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. அந்த காணொலியில் மரணக் கிணற்றுக்குள் இரண்டு கார்கள் மிக வேகமாக ஒரே உயரத்தில் ஒன்றையொன்று தொடர்வது தெளிவாகத் தெரிகிறது. ஆரம்பத்தில் எல்லாம் சாதாரணமாகவே இருந்தது.
இரு ஓட்டுநர்களும் முழு நம்பிக்கையுடன் காரை ஓட்டினர். அதைப் பார்க்க வந்த பார்வையாளர்களும் உற்சாகப்படுத்தினர். ஆனால் எதிர்பாராத விதமாக ஒரு வளைவில் இரண்டு கார்களும் மிக நெருக்கமாக வந்தன. ஓட்டுநர்கள் தூரத்தைக் கணிக்கத் தவறியதால், அடுத்த நொடியே இரண்டு கார்களும் பயங்கரமாக மோதிக்கொண்டன.
மோதலின் வேகம் அதிகமாக இருந்ததால், கார்கள் இரண்டும் காற்றில் பறந்து நேராகக் கீழே விழுந்தன. கார்கள் விழுந்தவுடன் சுற்றிலும் அலறல் சத்தம் கேட்டது. இந்த கோரமான விபத்தைப் பார்த்ததும் பார்வையாளர்களும் ஏற்பாட்டாளர்களும் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். சில மக்கள் உதவிக்காக உடனடியாகக் கிணற்றுக்குள் குதித்தனர்.
மற்றவர்கள் பயத்தில் வெளியே ஓடினர். இதனால், அங்கு பெரும் குழப்பமான சூழல் ஏற்பட்டது. இந்த அதிர்ச்சியூட்டும் காணொலி இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வருகிறது. இதற்குப் பலரும் ஆவேசமாகவும், ‘இவ்வளவு அபாயகரமான விளையாட்டை ஏன் நடத்த வேண்டும்?’ என்று கேள்வியெழுப்பியும் கருத்து தெரிவித்துள்ளனர்.