மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஐ-பேக் (I-PAC) அலுவலகத்தில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் செய்தி காட்டுத்தீயாகப் பரவிய நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரடியாக அந்த அலுவலகத்திற்குச் சென்று அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது ஒட்டுமொத்த தேசத்தையும் உற்றுநோக்க வைத்துள்ளது.
பலருக்கும் ஐ-பேக் என்றால் என்ன என்ற சந்தேகம் இருக்கலாம். Indian Political Action Committee என்பதன் சுருக்கமே I-PAC. இது ஒரு அரசியல் வியூகம் வகுக்கும் நிறுவனம் (Political Consultancy). தேர்தல்களில் எந்தத் தொகுதியில் யார் நின்றால் வெற்றி பெறுவார்கள், என்ன மாதிரியான விளம்பரங்கள் செய்ய வேண்டும், மக்களின் மனநிலை என்ன என்பதைத் துல்லியமாகக் கணித்துத் தரும் ‘மாடர்ன்’ தேர்தல் கம்பெனி இது. தமிழகத்தில் திமுக மற்றும் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்கு இவர்களின் வியூகங்கள் முக்கியக் காரணமாக இருந்தன.
நிலக்கரி கடத்தல் தொடர்பான பண மோசடி வழக்கில் இந்தச் சோதனை நடப்பதாக அமலாக்கத்துறை கூறினாலும், மம்தா பானர்ஜி அதை மறுக்கிறார். “2026 தேர்தலுக்காக ஐ-பேக் நிறுவனத்திடம் நாங்கள் சேமித்து வைத்துள்ள ரகசியத் தகவல்கள், வாக்காளர் விபரங்கள் மற்றும் தேர்தல் வியூகங்களைத் திருடவே பாஜக அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள ED-யை ஏவிவிட்டுள்ளது” என மம்தா ஆவேசமாகச் சாடியுள்ளார்.
வரலாற்றில் முதல்முறையாக ஒரு தனியார் நிறுவனத்தில் நடக்கும் ரெய்டுக்கு, ஒரு மாநில முதல்வர் நேரில் சென்று எதிர்ப்பு தெரிவித்தது இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஐ-பேக் அலுவலகத்தில் இருக்கும் கம்ப்யூட்டர்களில் உள்ள “ரகசிய தரவுகள்” யாருடைய கைகளுக்குச் செல்லும் என்பதே இப்போதைய மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.