தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளான சூர்யா - ஜோதிகா காதலிக்க ஆரம்ப காரணம் நடிகை ராதிகா என நடிகர் சிவகுமார் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மூத்த மகனான சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்கிறார். இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து கடந்த 2006ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு தியா, தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இப்படியான நிலையில் ஒரு நேர்காணலில் சிவகுமார் மற்றும் ராதிகா இணைந்து பங்கேற்றனர். அந்த நேர்காணலை நடிகை சுஹாசினி தொகுத்து வழங்கியிருந்தார்.
அதில், நீங்கள் சிவகுமார் மற்றும் சூர்யாவுடன் இணைந்து உயிரிலே கலந்தது என்ற படத்தில் நடித்தது பற்றி ராதிகாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராதிகா, “அந்த காலக்கட்டத்தில் சூர்யா ரொம்ப அமைதியானவர். குனிந்த தலை நிமிராமல் தான் உட்கார்ந்திருப்பார். சூர்யா இப்படியெல்லாம் இருக்கக்கூடாது. தைரியமாக, சிரித்த முகமாக இருக்க வேண்டும் என சொல்வேன்.
அந்த படத்தில் ஹீரோயினாக ஜோதிகா நடித்திருந்தார். அவரும் ஷூட்டிங் நடக்கும்போது ஒரு மூலையில் அமைதியாக உட்கார்ந்திருப்பார். நான் சூர்யாவை அழைத்து போய் ஜோதிகாவிடம் பேசு. நல்லா பேசு என சொல்வேன் என கூறினார். இப்படி அமைதியா வெட்கப்பட்டு கொண்டு இருந்தால் எப்படி லவ் சீனில் எல்லாம் நடிக்க முடியும். அதனால் ஜோதிகாவிடம் பேச சொல்வேன். அவர் வேண்டாம் அக்கா என சொல்வார்” என தெரிவித்தார்.
இதனையடுத்து பேசிய நடிகர் சிவகுமார், “ சூர்யா,ஜோதிகா இரண்டு பேரை சேர்த்து வைத்த அயோக்கிய பெண் ராதிகா தான். அவன் பாட்டுக்கு சிவனேன்னு இருந்திருப்பான். போய் பேசு பேசு என சொல்லி இன்று அவர்கள் இரண்டு குழந்தைக்கு பெற்றோராக இருக்கிறார்கள்” என நகைச்சுவையாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ராதிகா, நான் சித்தி சீரியல் நடிக்கும்போது சூர்யா ஜோதிகா காதல் மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது. அந்த சீரியல் ஷூட்டிங்கில் காலை முதல் மாலை வரை சிவகுமார் என்னை வச்சு செய்து விடும் அவர்கள் காதலிப்பதைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பார். இந்த பக்கம் சூர்யா எனக்கு போன் செய்து அப்பா என்ன மனநிலையில் இருக்கிறார் என விசாரிப்பார் என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து பேசிய சிவகுமார், “சூர்யா - ஜோதிகா இருவரும் 5 ஆண்டுகள் காதலித்தார்கள். சினிமாவில் 150 பேரை காதலிப்பது போல நடித்த நான் ஏன் என்னுடைய பையன் ஒரு பெண்ணை காதலிக்கிறான் என சொல்லும்போது வேண்டாம் என சொல்ல முடியும். கட்டுன்னா ஜோதிகாவை.. இல்லையென்றால் நான் வாழ்க்கை முழுவதும் தனியாக இருந்து கொள்கிறேன் என சொன்னான். இப்படி ஒரு உண்மையான காதலா என சல்யூட் அடித்து திருமணத்திற்கு ஓகே சொன்னேன்” என தெரிவித்தார்.