அருண்ராஜா காமராஜா இயக்கிய கனா படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார் நடிகர் சிவகார்த்திகேயன். இதனைத் தொடர்ந்து நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா , வாழ் , டாக்டர் , டான் என தொடர் வெற்றிப்படங்களை தயாரித்துள்ளார். தொலைக்காட்சி தொடரில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ளார். இதனிடையில் திரைத்துறையைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரிடம் இருந்து தனக்கு பிரச்சனை கொடுக்கப்படுவதாக சிவகார்த்திகேயன் பல மேடைகளில் தெரிவித்துள்ளார். தற்போது இது குறித்து ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.
சிவகார்த்திகேயன் ப்ரோடக்ஷன்ஸ் சார்பாக அடுத்தபடியாக தாய்க்கிழவி திரைப்படம் வெளியாக இருக்கிறது. சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள இப்படத்தில் ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் குறித்தான பேட்டி ஒன்றில் ராதிகாவிடம் சிவகார்த்திகேயன் பற்றிய ஒரு தகவலை ரங்கராஜ் பாண்டே பகிர்ந்துகொண்டார். " சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியபோது என்னிடம் மூத்த தயாரிப்பாளர் ஒருவர் பேசினார். இப்போதான் நான்கு படம் நடித்திருக்கிறார் அதற்குள் என்ன தயாரிப்பு நிறுவனம் தொடங்குவது என்று அவர் சொன்னார். அவர்கள் சிவகார்த்திகேயனுக்கு தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். " என்று ரங்கராஜ் பாண்டே தெரிவித்தார்.
ஞானவேல்ராஜாவா ?
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் ரங்கராஜ் பாண்டே குறிப்பிட்டது ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை தான் என்று ரசிகர்கள் பலர் கூறி வருகிறார்கள். ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்தார். இந்த படம் வசூல் ரீதியாக நஷ்டத்தை சந்தித்ததால் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் மற்றொரு படத்தில் நடிக்க இருப்பதாக பேச்சுவார்த்தை நடந்தது. மேலும் இப்படத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு தரவிருந்த 15 கோடி சம்பளத்தில் பாக்கி இருந்ததால் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு எதிராக சிவகார்த்திகேயன் மெட்ராஸ் ஹை கோர்டில் மனுதாக்கல் செய்தார்.