இமாச்சல பிரதேசத்தின் லாஹவுல்-ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள கீலாங் அரசு மருத்துவமனையில், இரவு பணியில் இருந்த பெண் மருத்துவரிடம் சுற்றுலா பயணி ஒருவர் மிகவும் மோசமாக நடந்து கொண்ட வீடியோ இணையத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மது போதையில் இருந்ததாகக் கூறப்படும் அந்த நபர், அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் முன்னிலையிலேயே அந்த பெண் மருத்துவரை ஒருமையில் பேசியும், அவரது தொழிலைக் கேவலப்படுத்தியும் மிரட்டல் விடுத்துள்ளார். தனது தாயுடன் போனில் பேசும் போது, “இவள் ஒரு சாதாரண பிசிஷியன் தான்” என கிண்டலாகப் பேசிய அந்த நபர், “உன் வாழ்க்கையை நரகமாக்கி விடுவேன்” என பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
இவ்வளவு அநாகரீகமாக அவர் மிரட்டிய போதும், அந்த பெண் மருத்துவர் மிகவும் நிதானமாகப் பதிலடி கொடுத்தது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
மேலும், அங்கிருந்த போலீசாருக்கு அந்த நபர் லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் திடுக்கிடும் புகார் எழுந்துள்ளது. மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரும் வேளையில், பொது இடத்தில் ஒரு பெண் மருத்துவருக்கு நேர்ந்த இந்த அவமரியாதை சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளதுடன், அந்த நபரை இமாச்சல பிரதேசத்திற்குள் நுழைய வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.