மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில், திருமணத்தை மீறிய தகாத உறவால் கணவனைக் கொன்று செப்டிக் டேங்கிற்குள் வீசிய மனைவியின் செயல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரின்ஸ் பால்மிகி (22) என்ற இளைஞர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாயமான நிலையில், அவரது மனைவி துளசி தனது கணவரைக் காணவில்லை என நாடகமாடி போலீசில் புகாரளித்துள்ளார். ஆனால், போலீசாரின் தீவிர விசாரணையில் துளசிக்கு சோயிப் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது வெளிச்சத்திற்கு வந்தது.
திருமணத்திற்கு முன்பே காதலித்து வந்த இவர்கள், திருமணத்திற்குப் பிறகும் தங்களது உறவைத் தொடர்ந்துள்ளனர். இதற்குத் தடையாக இருந்த கணவன் பிரின்ஸை தீர்த்துக்கட்ட முடிவெடுத்த ஜோடி, அவருக்கு அதிகப்படியான போதைப்பொருளைக் கொடுத்து மயக்கமடையச் செய்து கொலை செய்துள்ளனர்.
பின்னர் யாருக்கும் சந்தேகம் வராத வகையில், வீட்டின் பின்னால் இருந்த செப்டிக் டேங்கிற்குள் பிணத்தைப் போட்டு அதன் மேல் குப்பைகளை மூடியுள்ளனர். உடல் சீக்கிரம் அழுக வேண்டும் என்பதற்காக செப்டிக் டேங்கிற்குள் மூட்டை மூட்டையாக உப்பை கொட்டியதும் விசாரணையில் தெரியவந்தது.
தற்போது அந்த டேங்கில் இருந்து எலும்புக்கூடுகளை மீட்ட போலீசார், கில்லாடி மனைவி துளசி மற்றும் அவரது காதலன் சோயிப்பை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.