உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்தியன் வங்கியில், ஓய்வூதியம் பெற வந்த 65 வயது முதியவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. அஷ்பாக் என்ற அந்த முதியவர், நகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
அவர் வங்கியின் பணப் பரிமாற்ற வரிசையில் நின்று கொண்டிருந்தபோது, திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு நிலைகுலைந்து கீழே விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாகக் காப்பாற்ற முயன்றும் பலனின்றி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தத் துயரமானக் காட்சி வங்கியின் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சமீபகாலமாக உத்தரப் பிரதேசத்தில் இது போன்ற திடீர் மாரடைப்புச் சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு ஜான்சியில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில், மேடைக்குச் சென்ற 62 வயது நபர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
“>
இதேபோல் உடற்பயிற்சிக் கூடங்களில் வேலை செய்பவர்கள் மற்றும் விளையாட்டில் ஈடுபடுபவர்கள் கூடத் திடீர் மாரடைப்பால் உயிரிழப்பது கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. அஷ்பாக்கின் இந்தத் திடீர் மரணம் அவரது குடும்பத்தினரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.