அதிமுக மற்றும் பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். அங்கு இன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
ஏற்கனவே பாஜக தரப்பில் பியூஸ் கோயலுடன் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படாததால், தற்போது நேரடியாக அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தத் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் பாஜக சுமார் 30 முதல் 70 தொகுதிகள் வரை கேட்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணியில் பாஜகவின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாலும், அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளைக் கேட்டு அழுத்தம் கொடுப்பதாலும் அதிமுக நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் எத்தனை தொகுதிகள் யாருக்கு என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.