முதலமைச்சர் வீட்டில்கூட விஜய்க்கு ஒரு ஓட்டு உறுதி...! - நாஞ்சில் சம்பத் அதிரடி பேச்சு
Seithipunal Tamil March 04, 2026 06:48 PM

திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் (த.வெ.க.) சார்பில் நடைபெற்ற கொள்கை விளக்க பொதுக்கூட்டம் அரசியல் வெப்பத்தை கிளப்பியது. இதில் கட்சியின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டு உற்சாகமாக உரையாற்றினார்.

அவர் பேசும்போது, “த.வெ.க. ஒரு சாதாரண கட்சி அல்ல; அணைக்க முடியாத நெருப்பைப் போல நாளுக்கு நாள் சக்தி பெருகிக் கொண்டே வருகிறது” என்று தொடங்கினார்.

தமிழக அரசியல் நிலவரத்தை விமர்சித்த அவர், புதிய மாற்று சக்தியாகத் தொடங்கிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இன்று திராவிட முன்னேற்றக் கழகம் காலடியில் தள்ளாடுகிறது என்றார்.

அதேபோல், கேப்டன் விஜயகாந்த் தொடங்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனது தனித்துவத்தை இழந்து தி.மு.க.விடம் அடகு வைக்கப்பட்ட நிலை ஏற்பட்டுவிட்டதாக குற்றம்சாட்டினார்.

மேலும், கமல் ஹாசன் தனது கட்சி உயிரோடு உள்ளதா என டார்ச் லைட்டுடன் தேடும் சூழல் உருவாகியுள்ளது என்றும் நையாண்டி செய்தார். சிலர் தேர்தல் அறிவிப்பதற்கும் முன்பே வேட்பாளர்களை அறிவித்து குழப்பத்தில் நிற்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து அவர், “ஒரு தேசிய கட்சியும், ஒரு மாநில கட்சியும் த.வெ.க.வுடன் கூட்டணிக்கு தயாராக உள்ளன. அதனால் நாங்கள் தனியாக மட்டும் அல்ல, வலுவான அணியாகவும் களமிறங்கத் தயாராக இருக்கிறோம்.

12 லட்சம் புதிய வாக்காளர்களின் ஆதரவு எங்களுக்குப் பின்னணியாக உள்ளது. முதலமைச்சரின் வீட்டில்கூட விஜய்க்கு ஒரு ஓட்டு இருக்கிறது. எத்தனை கூட்டணிகள் சேர்ந்தாலும் த.வெ.க.வை வீழ்த்த முடியாது.

விஜய் ஆகாயம் போன்றவர்; அண்டங்காக்கைகள் அசுத்தம் செய்ய முடியாது” என்று தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.அவரது பேச்சு முழுவதும் உற்சாகம், தாக்கம் மற்றும் அரசியல் விமர்சனங்களால் கூட்டத்தினரை பரபரப்பாக்கியது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.