வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யாவின் 45 ஆவது படத்தின் டைட்டில் விஸ்வநாத் & சன்ஸ் அண்மையில் வெளியானது. மமிதா பைஜூ இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் அவரது நடிப்பு குறித்து படத்தில் நடித்துள்ள ராதிகா பாராட்டி பேசியுள்ளார். இந்த படத்தின் கதைக்கு நாயகி சிறப்பாக நடிப்பது மிக அவசியம் என்றும் அதை மமிதா பைஜூ சிறப்பாக செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நடிகை ராதிகா சரத்குமார் நடித்துள்ள தாய்கிழவி திரைப்படம் திரையரங்குகளில் வசூலை குவித்து வருகிறது. அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இப்படத்திற்காக ராதிகா 80 வயது கதாபாத்திரத்தில் ப்ராஸ்தெடிக் மேக் அப் போட்டு நடித்துள்ளார். படத்தில் குறைவான காட்சிகளில் நடித்திருந்தாலும் ராதிகாவின் நடிப்பு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரால் பாராட்டுக்களை பெற்று வருகிறது. 4 நாட்களில் தாய்கிழவி திரைப்படம் ரூ28 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்தபடியாக சூர்யா நடித்துள்ள விஸ்வநாத் & சன்ஸ் படத்திலும் ராதிகா நடித்துள்ளார். சித்ரா லட்சுமணன் உடனான பேட்டி ஒன்றில் இப்படம் குறித்து அவர் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டார். குறிப்பாக படத்தில் நாயகியாக நடித்துள்ள மமிதா பைஜூவின் நடிப்பை அவர் பாராட்டி பேசினார்.
லக்கி பாஸ்கர் படத்திற்கு பின் வெங்கி அட்லூரி சூர்யாவை வைத்து இயக்கியுள்ள படம் விஸ்வநாத் & சன்ஸ். சிதாரா என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வரும் ஜூலை மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் சூர்யா 45 வயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக 25 வயது நாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். ராதிகா பேசும்போதும் " இந்த படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் சொன்னபோது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஆனால் இந்த கதைக்கு ஏற்ற நாயகியை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அது ரொம்ப முக்கியம் என்றேன். மமிதா பைஜூவை நாயகியாக தேர்வு செய்து அவருடன் ஒரு காட்சிக்கு என்னை ரிகர்சல் பார்க்க சொன்னார் இயக்குநர். மமிதா பைஜூ மிக இயல்பாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடியவராக இருக்கிறார். இந்த படத்திற்கு அவர் மிகச் சரியான தேர்வாக தோன்றினார். ' என்று அவர் கூறினார்.