பாரத ரத்னா விருது வழங்கும் விழாவில் குடியரசு தலைவருக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்வைத்த குற்றச்சாட்டை பாஜக வன்மையாக மறுத்துள்ளது.
மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டபோது, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நின்று கொண்டிருந்தார், ஆனால் பிரதமர் மோடி அமர்ந்திருந்தார் என மம்தா குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக, இது "மம்தாவின் Fake News Factory உருவாக்கிய வதந்தி என்றும், அதிகாரப்பூர்வ நெறிமுறைகளின்படியே விழா நடந்ததாகவும் கூறியுள்ளது. குடியரசு தலைவர் விருது வழங்கும்போது அருகே இருப்பவர்கள் அமர்ந்திருப்பதுதான் மரபு என்றும், இதில் எந்த விதிமீறலும் இல்லை என்றும் பாஜக விளக்கியுள்ளது.
குடியரசுத் தலைவர் முர்முவின் மேற்கு வங்க பயணத்தின்போது ஏற்பட்ட நெறிமுறை குளறுபடிகள் குறித்து மத்திய அரசு அம்மாநில அரசிடம் விளக்கம் கேட்டுள்ள நிலையில், மம்தா இந்த பழைய புகைப்படத்தை வைத்து அரசியல் செய்வதாக பாஜக சாடியுள்ளது.
பழங்குடியின தலைவரான குடியரசு தலைவரை பாஜக அவமதிப்பதாக மம்தா கூற, மம்தாதான் அரசியல் காரணங்களுக்காக உண்மையை மறைப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva