கொடைக்கானலில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீ; வனப்பகுதியை பாதுகாக்க கோரிக்கை..!
Seithipunal Tamil March 26, 2026 06:48 AM

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நிலவிய உறை பனியால் புல்வெளிகள், புதர்கள், செடி கொடிகள் என அனைத்தும் காய்ந்து போயுள்ளன. தற்போது பங்குனி மாதம் தொடங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் அங்குள்ள சில வருவாய் நிலங்கள் மற்றும் வனப்பகுதியில் தீ பரவி எரிந்து வருகிறது.

இந்நிலையில் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளங்கி மலைக் கிராமத்தில் உள்ள தனியார் பட்டா நிலங்களிலும், வருவாய் நிலங்களிலும் திடீரென காட்டுத்தீ பரவியுள்ளது. இதனால் பல ஏக்கர் பரப்பளவில் தீ பரவியுள்ளது.

அத்துடன், காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவி வருவதால் இந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக அருகில் உள்ள வனப்பகுதிக்குள் தீ பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. விவசாய பகுதிகளில் தீ பரவாமல் இருக்க விவசாயிகள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உடனடியாக இந்த தீ பரவல் குறித்து அறைந்த வனத்துறையினர் விரைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளனர். அத்துடன் தீயானது வனப்பகுதிக்குள் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.