'திட்டமிட்டு வெறுப்பை பரப்பி வருகிறார்கள்'; 'துரந்தர்' படத்தை விமர்சித்துள்ள இயக்குநர் வசந்தபாலன்..!
Seithipunal Tamil March 29, 2026 06:48 AM

சோமீதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நீளிரா' என்ற திரைப்படம் படம் வரும் ஏப்ரல் 03-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. 

இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் வசந்தபாலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில்  விழாவில் பேசிய  வசந்தபாலன் ஆதித்யா தர் இயக்கத்தில், ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்தது வரும் துரந்தர் படத்தை விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், இந்தியாவில் துர்தர்ஷன் ஆரம்பிக்கும் போது நாடு முழுவதும் ராமாயணம் சீரியல் ஒளிபரப்பானது. ராமாயணம் ஒளிபரப்பாகும் ஞாயிற்றுக்கிழமை சாமி கும்பிடுவதற்கான நேரமாக ஒதுக்கினார்கள்.
இந்த தொடர் இந்தியா முழுவதும் தீயாய் பரவியது. அப்போது தான், ராம ஜென்ம பூமி என்ற குழு ‘பாபர் மசூதி இடிப்பு’ என்ற கருத்தியலை விதைத்தது என்று குறிப்பிட்டுள்ளார். 'காஷ்மீர் ஃபைல்ஸ்', தற்போது ‘துரந்தர்’ ஆகிய படங்கள் மூலம் திட்டமிட்டு வெறுப்பை பரப்பி வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் 'வெறுப்பின் கொட்டம் வீழ்க, அன்பு அறமென எழுக' எனச் சொல்லும் படமாகத்தான் சோமீயின் 'நீளிரா'வைப் பார்க்கிறேன். தேர்தலுக்கு பின் நாம் கடுமையான சூழலை சந்திக்க இருக்கிறோம்.  போரின் மொத்த சூழலும், நம் ஊருக்குள், நம் வீட்டுக்குள் வரப்போகிறது. அது தவிர்க்கவே முடியாததாக இருக்கும் என்று இயக்குநர் வசந்தபாலன் பேசியுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.