வாணியம்பாடி அருகே போதை மாத்திரைகளைக் ரயில் மூலம் கடத்தி தப்பிச் செல்ல முயன்ற கோவையைச் சேர்ந்த 06 இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெளி மாநிலத்திலிருந்து போதை மாத்திரைகள் கடத்தி வந்து, உள்ளூரில் சப்ளை செய்வதாக ஐஜி அஸ்ரா கார்க்கிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் போரில் தீவிரசோதனை நடத்தப்பட்டது.
அதன்படி, ஐஜி தனிப்படை குழுவினருக்கு அலர்ட் விடுக்கப்பட்டு களத்தில் இறங்கினர். பேருந்து நிலையம், ரயில் நிலையம் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில், பாதுகாப்பு வலை விரித்து சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த பலரையும் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது புனேவிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லக்கூடிய கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில், 06 பேர் கொண்ட கும்பல் போதை மாத்திரைகளுடன் தப்பிச் செல்ல முயன்ற தகவல் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளது.
அதனை தொடர்ந்து, காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து கோவைக்குச் செல்ல இருந்த நபர்களை, பின்தொடர்ந்து வாணியம்பாடி அருகே வைத்து மடக்கிப் பிடித்துள்ளனர். போலீசாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்ற கும்பலை, துப்பாக்கி முனையில் பிடித்துள்ளனர். அப்போது அவர்களிடம் இருந்து சுமார் 1,300-க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.
அதன் பின்னர் பலத்த பாதுகாப்புடன் பிடிபட்டவர்களைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், அவர்கள் கோவையைச் சேர்ந்தவர்கள் என்பதும் வெளி மாநிலத்திலிருந்து போதை மாத்திரைகளை மொத்தமாக வாங்கி வந்து கூடுதல் விலைக்கு கல்லூரி மாணவர்களிடம் விற்று வந்ததும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கைதுசெய்யப்பட்ட பிரசாந்த், பிரதாப், ஹாரிஸ் உள்ளிட்ட 06 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இதனையடுத்து, இவர்களுக்கு போதை மாத்திரைகளை மொத்தமாக சப்ளை செய்தது யார்..? உள்ளூரில் ஆர்டர் எடுக்க காத்திருந்தது யார்..? பணம் கொடுத்து போதை மாத்திரைகளை வாங்கியவர்கள் யார்..? உள்ளிட்ட கோணங்களில் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் மேலும் பல முக்கிய தலைகள் இதன் போது சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.